மருத்துவமனைக்கு வந்த வீடியோ வெளியான விவகாரத்தில் வேலை இழந்த பெண் ரசிகை தற்கொலை முயற்சி: நடிகர் அஜித் மேலாளர் மீது புகார்

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் அஜித். அதிக ரசிகர்களை கொண்ட அவர் வெளியே செல்லும்போது அவருடன் ரசிகர்கள் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.  

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க வந்த அஜித்தை ரசிகர்கள் சூழ்ந்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். அப்போது ரசிகர் ஒருவர் முககவசம் அணியாமல், அஜித்துடன் செல்பி எடுக்க முயன்ற போது செல்போனை பறித்த வீடியோ வைரலானது.

இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் கொரோனா ஊரடங்கின் போது நடிகர் அஜித் அவரது மனைவியுடன் சிகிச்சைக்காக தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது மருத்துவமனையில் மருத்துவர்களுக்கான ஒருங்கிணைப்பாளராக பணிப்புரிந்து வந்த பெண் ரசிகையான வளசரவாக்கத்தை சேர்ந்த பர்சானா(26) என்பவர் அஜித்துடன் செல்பி மற்றும் அவர் மருத்துவமனைக்கு வரும் வீடியோ  எடுத்துள்ளார். அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் பர்சானாவின் செல்போனை பறித்து கொண்டு புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்பக்கூடாது என பர்சானாவை எச்சரித்து செல்போனை திருப்பி கொடுத்து அனுப்பினர்.

ஆனால் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. இந்த புகைப்படத்தை எடுத்து சில விஷமிகள் அஜித்திற்கு கொரோனாவா என கேள்விகுறியுடன் பரப்பியதால் பர்சானாவை மருத்துவமனை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது.

இது குறித்து தகவலறிந்த அஜித்தின் மனைவி ஷாலினி மருத்துவமனை நிர்வாகத்துடன் பேசியதால் மீண்டும் பர்சனாவை பணிக்கு சேர்த்தனர். ஆனால் பர்சானாவிற்கு வேலை வழங்காமல் மீண்டும் பணியிலிருந்து நிறுத்தினர். மேலும் லோன் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை காட்டி பர்சனாவின் சான்றிதழ்கள் வழங்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.

கொரோனா ஊரடங்கினால் போதிய வருமானமின்றி குடும்பத்தை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவை சந்தித்து, நடிகர் அஜித்திடம் மன்னிப்பு கேட்டு, பணி கிடைக்க உதவுமாறு கேட்க போவதாக பர்சானா கூறினார். இதையடுத்து, அஜித்தை சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் நிவாரணம் வாங்கி தருவதாகவும் மேலாளர் சுரேஷ் சந்திரா கூறியதாகவும், பின்னர் அஜித்தை சந்திக்க முடியாது என சுரேஷ் சந்திரா மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பர்சனா தற்கொலைக்கு முயன்று கடந்த 1ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

இதற்கிடையே, நம்பிக்கை மோசடி செய்த நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பர்சானா வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அப்புகாரின்பேரில், வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கினால் போதிய வருமானமின்றி குடும்பத்தை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவை சந்தித்து, நடிகர் அஜித்திடம் மன்னிப்பு கேட்க முடிவு செய்தார்.

Related Stories: