திருவனந்தபுரம்: தமிழக எல்லையில் உள்ள வாளையார் வழியாக கேரளாவுக்கு கஞ்சா கடத்துவதாக பாலக்காடு கலால்துறை துணை ஆணையர் ஷாஜிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தமிழ்நாட்டில் இருந்து ஒரு லாரி வந்தது. அதில் சரக்கு எதுவும் இல்லை. லோடு இறக்கி விட்டு வருவதாக லாரியில் இருந்தவர்கள் கூறினர்.
சந்தேகமடைந்த அதிகாரிகள் லாரியை சோதனை செய்தனர்.
இதில் லாரியின் அடிப்பகுதியில் 9 ரகசிய அறைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றில் ஆயிரம் கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ந்தனர். அவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.100 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, லாரியில் இருந்த கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த பாதுஷா (26), பாயிஷ் ஹமீது (21), ஜிஷ்ணு (24) ஆகியோரை கைது செய்தனர். இது தொடர்பாக இவர்களிடம் கலால் துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடியாக விசாரித்து வருகின்றனர். அதில், முழு ஊரடங்கு அமலுக்கு வரும் என்று கருதி அதிக விலைக்கு விற்பதற்காக மொத்தமாக வாங்கி வந்தது விசாரணையில் தெரிய வந்தது.