புதுடெல்லி: ‘கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜனை தயாரித்து வழங்குவதற்காக, ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி பிரிவை மட்டும் திறக்க அனுமதிக்கலாம் என, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்க பயன்படுத்தப்படும் மருத்துவ ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமான வேதாந்தா, உச்ச நீதிமன்றத்தில் கடந்த 15ம் தேதி இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில், ‘நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதித்து மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான அளவுக்கு மருத்துவ ஆக்சிஜன் கிடைக்கவில்லை. இந்த இக்கட்டான நேரத்தில் நாட்டுக்கு உதவி செய்வதற்காக, எங்கள் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி கூடத்தை திறக்க மட்டும் அனுமதி அளிக்க வேண்டும். அதில் மருத்துவ ஆக்சிஜனை தயாரித்து, அரசுக்கு இலவசமாக சப்ளை தர தயாராக இருககிறோம்,’ என கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையில், ‘ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்திக் கூடத்தை திறக்க அனுமதிக்க கோரும் மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும்,’ என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.