வாழ்க்கை+வங்கி=வளம்!

நன்றி குங்குமம் தோழி

ஒரு நாட்டின் உற்பத்தி மற்றும் வணிகத்தில் எந்த அளவிற்கு சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்களின் பங்களிப்பை வழங்குகின்றனவோ அதைவிடக் கூடுதலாக கட்டமைப்புத்துறை, வாகனங்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் உற்பத்தித்துறை, ஏற்றுமதி, இறக்குமதி வணிகம், நுகர்வோர் வாங்கும் பொருட்களுக்கான மொத்த உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் சந்தைகள் என்னும் இவை போன்ற மிகப்பெரிய வணிக அமைப்புகள் பொருளாதார வளர்ச்சிக்கு பெருமளவு பணி செய்கின்றன. நடுத்தர நிறுவனங்களின் வரையறை குறித்துப் பார்க்கும்போது அவற்றில் ஆலை மற்றும் இயந்திரங்கள் அல்லது உபகரணங்களில் முதலீடு ரூ.50 கோடிக்கு மேல் இல்லாதவை மற்றும் ஆண்டின் வருமானம் ரூ.250 கோடிக்கு மேல் இல்லாதவை. இவற்றோடு ஒப்பிடும்போது ஆலை மற்றும் இயந்திரங்கள் அல்லது உபகரணங்களில் முதலீடு ரூ.50 கோடிக்கு மேலும் மற்றும் ஆண்டு வருமானம் ரூ.250 கோடிக்கு மேலும் உள்ளவை பெருநிறுவனங்கள். இவை கூட்டு நிறுவனமாகவோ, தனியுடைமை கம்பெனியாகவோ, பொதுவுடைமை கம்பெனியாகவோ, பிற நிறுவனமாகவோ செயல்படும்.

பெருநிறுவனக் கடன்கள்

வணிக கட்டிடம் கட்டுவதற்கு, இயந்திரங்கள், உபகரணங்கள், வாகனங்கள் வாங்குவதற்கு தவணைக்கடனும், மூலப்பொருள் வாங்குவதற்கும், மூலதன கடனாக மிகைப்பற்று அல்லது குறுகியகால பணக்கடன் ஆகியவை வங்கிகளால் பெருநிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன. உடனடி நிதி சார்ந்த வசதிகள், கடன்கள் மட்டுமல்லாமல் வங்கி உத்தரவாதம் மற்றும் வங்கி உறுதிக் கடிதம் என்னும் நிதி சாராத வசதிகளையும் வங்கிகள் பெருநிறுவனங்களுக்கு வழங்குகின்றன. முதலீட்டுத்தொகை, வருட உற்பத்தியளவு லாபம் ஆகிய பல காரணிகளைக் கணக்கில் கொண்டு பெருவணிக நிறுவனங்களுக்கு வங்கிகள் தங்களது ஆண்டுக் கடன் கொள்கையின்படி கடன் வழங்குகின்றன.  

வழங்க வேண்டிய ஆவணங்கள்

1)நிறுவனம் குறிப்புகள்

2)தொழில் செய்யும் முகவரி  

3)தொழில் நடத்த அரசு வழங்கிய அனுமதிச் சான்றிதழ்கள், பதிவுச் சான்றிதழ். கூட்டு நிறுவனமென்றால் கூட்டு ஒப்பந்தம், தனியுடைமை அல்லது பொதுவுடைமை கம்பெனியெனில் நிறுவன ஒருங்கிணைப்புச் சான்றிதழ் மற்றும் தொழில் தொடங்கியதற்கான சான்றிதழ்

4)நிறுவனத்தின் உரிமையாளர் / பங்குதாரர்கள் / இயக்குநர்கள் குறித்த முழு விவரங்கள்

5)கடந்த மூன்று ஆண்டுகளுக்கான நிதிநிலைக் குறிப்புகள் / இருப்புநிலைக் குறிப்பு, லாபம் நஷ்டக் கணக்கு, பணப்புழக்க அறிக்கைகள்

6)நிறுவனத்தின் சொத்து மற்றும் நிலுவையில் உள்ள பிற கடன்கள்

7)அடுத்த மூன்று (அ) ஐந்து ஆண்டுகளுக்கான வணிக கணிப்பும் மதிப்பீடும்

8)தொழிலில் இருக்கும் சந்தை வாய்ப்பு

9)தொழிலில் சந்தைப் போட்டியாளர்கள் விவரம்

10)வங்கியிலிருந்து தேவைப்படும் நிதி சார்ந்த மற்றும் நிதி சாராத வசதிகள்

11)நிறுவனத்தின் மூலதன விவரம்

12)பிணைய விவரம், நிலையான சொத்து என்றால் அதன் இருப்பிடம், சந்தை மதிப்பு மற்றும் வில்லங்கச் சான்றிதழ்.

13)பிற வங்கிகளில் விண்ணப்பதாரர் வைத்துள்ள கணக்கு விவரங்கள்

14)வங்கியில் கடன் வசதிபெறக் கோரும் நிர்வாக குழு தீர்மானம்

15)நிறுவனத்தின் சார்பில் கையொப்பமிட அங்கீகரிக்கப்பட்ட இயக்குனர்களின் புகைப்படம், தனிநபர் அடையாள சான்று மற்றும் இருப்பிடச் சான்று.

16)வாங்கவேண்டிய இயந்திரங்களின் விலைப்பட்டியல்

17)தொழிற்சாலை கட்டிடங்கள் கட்டவேண்டுமென்றால் அதற்கான அனுமதிக் கடிதம், வரைபடம், உரிமை விவரம் மற்றும் மதிப்பீடு.

18) நிறுவனத்தின் மேல் அல்லது நிறுவனம் தொடர்ந்த நீதிமன்ற வழக்குகள் இருப்பின் அவற்றின் விவரங்கள்.

மேற்குறிப்பிட்டவை தவிர மற்ற ஆவணங்களையும் வங்கியிடம் கடன்பெற விண்ணப்பத்துடன் வழங்க வேண்டும்.  தனிநபர் கடன்கள், சிறு நிறுவனக் கடன்கள் என்றால் அவற்றை அனுமதிப்பதில் வங்கியின் கணக்கீடு மிகவும் எளிமையானதாகும். ஆனால் அதிக முதலீடுகளும், சந்தையில் செயலாக்கம் உள்ள பெருநிறுவனங்களுக்குக் கடன் வழங்குவதென்றால் வங்கிகள் அதற்காக நிதி சார்ந்த பகுப்பாய்வுகளை மேற்கொள்கின்றன. அவற்றைப்பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு நிறுவனத்தின் இருப்பு நிலைக்குறிப்புகள். லாபநஷ்டக் கணக்குகள், பணப்புழக்க அறிக்கை ஆகியவற்றை பகுப்பாய்வு செய்வதற்கு விகிதக் கணக்கீடுகள் உதவுகின்றன. வங்கியில் கடன்பெற விண்ணப்பிக்கும் முன் நிறுவனமானது தன் நிதிநிலை வலிமையைத் தெரிந்துகொள்ள வேண்டும். நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கை, தற்போதைய நிதி நிலை எதிர்கால திட்டங்களுக்கான அடித்தளமாக அமைகிறது. பொதுவாக தமது கூடுதல் பணத்தேவைக்காகவே நிறுவனம் வங்கியில் கடன்பெற விழைகிறது.

 நிதி நிலையின் காரணிகள்

மூன்றாண்டுகளுக்கான இருப்புநிலைக்குறிப்பு, லாபநஷ்டக் கணக்கு, பணப்புழக்க அறிக்கை மதிப்புகளை கணக்கிட நிதி விகிதங்கள் உதவுகின்றன. இருப்புநிலையில் நிறுவனத்தின் பொருளாதார சொத்துக்கள் ஒரு பக்கத்தில் பட்டியலிடப்படுகின்றன. அந்த நிறுவனத்திற்கான பொறுப்புகள் மற்றும் பங்குதாரர்களின் பங்குகளின் மொத்த மதிப்பு மறுபக்கத்தில் எழுதப்படுகிறது. பொறுப்புகளில் இருந்து சொத்துக்கள் கழிக்கப்படும்போது நிறுவனத்தின் மூலதனம் மீதமாகிறது.

மேலும் சொத்துக்களும், பொறுப்புகளும் நீண்டகால மற்றும் குறுகியகால அளவீடுகளில் பிரிக்கப்படுகின்றன. இதில் விகித அளவீடு அல்லது  பகுப்பாய்வு என்பது கணக்கில் உள்ள இரண்டு காரணிகளின் ஒப்பீடாகும். நிதிஆதார விகிதமான கடன்- பங்குகள் விகிதம், பணப்புழக்க விகிதங்களான ரொக்க விகிதம், நடப்பு விகிதம், உடன்தீர்வு விகிதம், நிறுவன செயல்திறன் விகிதங்களான நிலுவையில் உள்ள பெறவேண்டிய தொகை – வருட மொத்த விற்பனை விகிதம், செலுத்த வேண்டிய தொகை – வாங்கிய பொருட்களின் மதிப்பு, லாபம் – வருட மொத்த விற்பனை விகிதம் ஆகிய அளவீடுகள் நிறுவனத்தின் நிதிநிலை வலிமையைச் சுட்டுகின்றன. இந்த விகிதங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு குறைந்தபட்ச அளவுகோல் உள்ளது. பகுப்பாய்வில் தெரியும் விகிதத்தை அந்த அளவுகோலுடன் ஒப்பிட்டு நிதி வலிமையை அளவீடு செய்யலாம்.   

 நிறுவனத்தின் பணப்பயன்பாடு ஒரு குறிப்பிட்ட நாளில் நிறுவனத்தின் தற்போதைய சொத்துக்களின்கூட்டுத் தொகையிலிருந்து அந்தநாளில் நிலுவையில் உள்ள குறுகிய காலத்தில் செலுத்தவேண்டிய பொறுப்புகளின் கூட்டுத் தொகையைக் கழித்தபிறகு மீதமுள்ள தொகை உடனடியாக நிறுவனம் தமது பிற நிதிச்செலவுகளை ஏற்று செயல்பட உதவும். இவ்வாறு கணக்கிடப்படும் தொகையின் அளவீடை நடப்பு விகிதம் என்பர். நிறுவனத்தின் தற்போதைய சொத்துக்கள் செலுத்தவேண்டிய தற்போதைய கடன்களைவிட அதிகமாக இருக்க வேண்டும், அதாவது நடப்பு விகிதம் ஒன்றுக்கு மேல் இருக்க வேண்டும். தற்போது செலுத்தவேண்டிய கடன் ரூ.100 என்றால் உடனே பணமாக்கக்கூடிய தோத்து ரூ.120 என்ற அளவிற்கு இருக்கவேண்டும்.

 இது முதல் நிதி வலிமை. மேலும் இன்னும் நுணுக்கமாக துரித விகிதக் கணக்கீட்டின்படி தற்போதைய சொத்துக்களில், அதாவது உடனே பணமாக மாற்றக்கூடிய சொத்துக்களில் கையிருப்பில் உள்ள சரக்குகளையும், முன்தேதியிலேயே பணம் செலுத்திவிட்ட செலவுகளையும் கழித்தபிறகு மீதமுள்ளவற்றின் பணமதிப்புடன் உடனே செலுத்தவேண்டிய கடன்களின் மொத்த தொகையைக் கழித்துவிடுவார். இந்த விகிதநிலை மிக நன்றாக இருந்தால் நிறுவனத்தின் நிதிவலிமை அளவீடு வங்கியின் கடன் வழங்கும் அளவீட்டு மதிப்பில் உயரும்.

நிறுவனத்தின் நிலையான சொத்துக்கள் மற்றும் திரவ சொத்துக்கள் ஆகியவற்றில் உடனடியாக பணமாக மாற்றக்கூடிய சொத்துக்களின் விகிதம் வங்கியால் கணக்கிடப்படுகிறது. நிலையான சொத்துக்களின் தேய்மான அளவீடு ஒரு பணப்புழக்கமில்லாத கணக்கீட்டிற்கான செலவாகும். இது நிறுவனத்திற்கு வரிச் சலுகையைப் பெற உதவும் செலவு. வணிகத்திலிருந்து பணம் வெளியேறாது. வணிகத்திற்குச் சொந்தமான சொத்துக்களின் மதிப்பு நிறுவனத்தின் நிலைப்புத்தன்மையை உறுதிப்படுத்துகின்றன.

சொத்துக்களின் மதிப்பு மூலதனத்தோடு ஒப்பிடும் விகிதம் இரண்டாவது நிதிவலிமை அளவீடாகும். மூன்றாவது நிதி வலிமையென்பது நிறுவன உரிமையாளர்களின் மொத்த பங்குகளுடன் நிறுவனத்தின் மொத்த பொறுப்புகளை ஒப்பீடு செய்வதாகும். இதன்மூலம் உள்ள நிகர பங்குகளுக்கு நிறுவனம் எவ்வளவு கடன் பெறமுடியும் என்னும் கணக்கீடு வங்கியால் மேற்கொள்ளப்படும். நான்காவது நிதிவலிமைக் குறியீடு ஒரு நிறுவனத்தின் மொத்த சொத்துக்களோடு அந்நிறுவனம் பெற்ற மொத்த கடன்தொகையை ஒப்பிட்டுப் பார்ப்பதாகும். இது நிறுவனம் கடன் மூலம் பெற்றுள்ள சொத்துக்களின் விகிதமாகும்.

லாப விகிதங்கள்

எந்த ஒரு நிறுவனமும் முதலீடு, தொழில்நுட்பம், உற்பத்தி, பொருளை வாங்குதல் விற்றல், அனைத்திற்குமான செலவுகள், வருமானம், லாபம் (அ ) நஷ்டம், வரி செலுத்துதல், மறுமுதலீடு ஆகிய காரணிகளில் பயணிக்கின்றன. இந்தப் பயணத்தில் தொழிலை பெருக்க வங்கிக்கடன் அவசியமாகிறது. அவ்வாறு பெறும் கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்தும் திறன் தொழிலின் செயல்திறனைச் சேர்ந்ததாகும்.

ஒரு நிறுவனத்தின் லாப விகிதம் அதே காலகட்டத்தில் சந்தையிலுள்ள சமநிலை வணிகப் போட்டியாளர்களின் லாப அளவுடன் ஒப்பீடு செய்யும்போது செயல்திறனின் உயரத்தைக் காட்டுகிறது. இதில் விகித மதிப்பீடு என்பது லாபத்தை நிறுவனத்தில் உள்ள பங்குத்தொகையோடு ஒப்பிடுவது, மொத்த சொத்துக்களோடு ஒப்பீடு செய்வது, மூலதனத்தோடு ஒப்பிடுவது போன்றவை ஆகும். நிறுவனம் ஒரு வருடத்தில் பெற்ற நிகர வருவாய் மொத்த நிகர விற்பனையில் எத்தனை சதவீதம், நிகர வருவாயின் சதவீதமாக வரிக்கு முந்தைய வருவாய் ஆகியவற்றை கணக்கிடுவதன் மூலம் நிறுவனத்தின் நிதி செயல்திறனை வங்கி தெரிந்துகொள்கிறது. வரிகளை செலுத்தியபின் உள்ள லாப அளவீடே விகித நிர்ணயத்திற்கு ஏற்கப்பட்டு நிதி வலிமையை நிர்ணயிக்கும்.

செயல்திறன் விகிதங்கள்

விற்பனை மற்றும் அதன்மூலம் லாபத்தை உருவாக்கும் செயல்திறன் ஒரு நிறுவனத்தின் நிதி வலிமையைக் கணக்கிட மிகவும் உதவுகிறது.  அதன் சொத்துக்களை உபயோகித்தல், பொறுப்புகளை நிர்வகித்தல், பங்குகளின் நுகர்வு, உபகரணங்களின் பயன்பாடு, சரக்குகளின் பரிவர்த்தனை, விற்ற பொருட்களுக்கான வரவுகள், செயல்பாட்டு மூலதனச் சுழற்சி ஆகியவை செயல்திறனை கூட்டுவதாகும். மூலப்பொருட்களை நிறுவனம் வாங்கியபிறகு விற்றவருக்கு எவ்வளவு நாட்களுக்குப்பிறகு பணத்தை செலுத்தலாம் மற்றும் உற்பத்தியான பொருட்களை நிறுவனம் விற்ற பிறகு அவற்றை வாங்கியவர் எத்தனை நாட்களுக்குப் பிறகு பணம் செலுத்துகிறார் என்னும் கணக்குகள் நிதிநிலை விகித அளவீடுகளில் முக்கிய காரணிகளாகும். மிகச் சிறந்த செயல்திறன் நிறுவனத்தின் லாபத்தோடு வளர்ச்சியை ஒவ்வொரு வணிக காலத்திலும் நிதி வலிமையெனக் காட்டும்.

கடனளிப்பு விகிதங்கள்

நீண்ட காலத்திற்கு கடனைத் திருப்பிச் செலுத்தும் நிதி வலிமை ஒரு நிறுவனத்திற்கு உள்ளதா என்பது வங்கியின் அடுத்த அளவீடாகும். நிறுவனம் பெற்ற கடன்தொகையோடு பங்குத்தொகை, மூலதனம், மொத்த சொத்துக்கள், ஆண்டு நிகர வருமானம் ஆகியவை ஒப்பீடு செய்யப்பட்டு அதன் விகிதக் குறியீடு கணக்கிடப்படுகிறது. கம்பெனியாக இருப்பின் பங்குக்கான ஈவுத்தொகை மிக முக்கியமான நிதி வலிமை அளவீடாகும்.

இருப்புநிலைக் குறிப்பிலிருந்து பெறப்பட்ட நிதி விகிதங்களைப் பயன்படுத்துதல் மற்றும் அவற்றை வரலாற்று ரீதியாக தொழில்துறை சராசரிகள் அல்லது போட்டியாளர்களுடன் ஒப்பிடுவது ஒரு வணிகத்திற்குத் தேவையான கடனை மதிப்பிட உதவும். நிதி விகிதங்களைப் பயன்படுத்தி கணக்கிட்டால், ஒரு நிறுவனம் எவ்வளவு திறமையாக வருவாயை உருவாக்குகிறது மற்றும் எவ்வளவு விரைவாக சரக்குகளை விற்கிறது என்பதை வங்கியால் தீர்மானிக்க முடியும். பணப்புழக்க அறிக்கையானது, குறிப்பிட்ட கால அளவீட்டில் பணத்தின் இருப்பையும் இயக்கத்தையும் தெரிந்துகொள்ள உதவுகிறது.

பண மேலாண்மை நிலைப்பாட்டில் இருந்து ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டை சரியாக மதிப்பிடுவதற்கு வெவ்வேறு விகிதங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதைப் புரிந்து கொள்வது அவசியம். பங்கு முதலீட்டின் விகிதத்தில் வருமானம் ஒரு நிறுவன வலிமையின் அளவீடாகும். வங்கிக்கடனுக்கு ஈடாக வழங்குவதற்கான பிணையத்தை ஒரு நிறுவனம் வைத்திருப்பது பெரிய வணிகக் கடன்களுக்குத் தகுதி பெறுவதை எளிதாக்கும். வங்கியின் நிபுணர் கடன் குழு விண்ணப்பதாரரின் குறிப்பிட்ட நிதித் தேவைகளை அளவிடுகிறது மற்றும் நிறுவனத்தின் கடன் தகுதியை மதிப்பிடுகிறது.

கடன் வழங்குவதற்குமுன் வங்கி ஒரு நிறுவனத்தின் நிதி வலிமையை மேற்கண்ட விகித ஒப்பீடுகள் மூலம் அளவீடு செய்து கடன் வழங்கலாமா அல்லது வேண்டாமா என்று முடிவெடுக்கும். மேலும் அதே தளத்தில் சந்தையில் உள்ள பிற நிறுவனங்களோடு ஒப்பீடு செய்வதும் அதன்வழி முடிவெடுப்பதும் வங்கித்துறையில் பின்பற்றப்படும் பொதுவான நடைமுறையாகும். இது குறித்து முழுமையாகத் தெரிந்துகொண்டால் வங்கியை அணுகும் முன்பே ஒரு நிறுவனம் தமது நிதி வலிமையை அளவீடு செய்து அதற்கு ஏற்றாற்போல இயக்க

நிலைகளில் முன்னேற்றம் கண்டு செயல்திறனை உயர்த்தலாம்.

ஒரு நிறுவனம் கடன் வாங்கி தம் வணிகத்தை உயர்த்தும்போது கடனுக்கான வட்டி மற்றும் கட்டணங்கள் செலுத்தும் சுமையும் அதிகரிக்கும். அந்தச் சுமையையும் ஏற்று பங்குதாரர்களின் பணமதிப்பை உயர்த்தும் நிறுவனமே செயல்திறன் மிக்கதாகும். அத்தகைய பெரு நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கும் நிதி சார்ந்த கடன்கள் மற்றும் நிதி சாராத வசதிகள் குறித்து பார்ப்போம்.

The post வாழ்க்கை+வங்கி=வளம்! appeared first on Dinakaran.

Related Stories: