மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் 8ம் நாளான நேற்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. மதுரையின் மகுடத் திருவிழாவான சித்திரைப் பெருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 8ம் நாளான நேற்று, மதுரை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. இரவு 8 மணிக்கு அம்மன் சன்னதி ஆறுகால் மண்டபத்தில் நடந்த பட்டாபிஷேக நிகழ்ச்சியின்போது மீனாட்சி அம்மன், மச்ச முத்திரை, இடப முத்திரை, ரத்தின ஆபரணங்கள் முதலிய அணிகலன்களால் அலங்காரம் செய்யப்பட்டு, பாண்டிய மன்னர்களின் அடையாளமான வேப்பம்பூ மாலை, ராயர் கிரீடம் அணிந்திருந்தார்.