சென்னை: கொரோனாவால் கடற்கரைகள் மூடப்பட்டுள்ளதால் கடற்கரை அருகில் உள்ள தங்கும் விடுதிகளுக்கு மவுசு கூடியுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. பகல் நேரத்தில் மட்டுமே பேருந்து மற்றும் வாகன போக்குவரத்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வாரக் கடைசியில் மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களுக்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடற்கரை அருகே, கடற்கரையை பார்த்து கட்டப்பட்டுள்ள விடுதிகள் வீடுகளைப்போல் குடும்பத்தினருடன் தங்கும் வசதிகளை அறிவித்துள்ளன. அதாவது, இந்த ரிசார்ட்டுகளில் வெள்ளிக்கிழமை விருந்தினர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. திங்கட்கிழமை காலை வரை அந்த ரிசார்ட்டுகளில் பிறந்தநாள், திருமண நாள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளை கொண்டாடலாம். கடற்கரைக்கு செல்லக்கூடாது. ஆனால், ரிசார்ட்டில் இருந்து மகிழலாம். ஞாயிற்றுக்கிழமை ரிசார்ட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்ற நிபந்தனை உள்ளதாம்.