தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை: 400 டன் உற்பத்தியாகிறது: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் !

சென்னை: தமிழகத்தில் வென்டிலேட்டர் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையின் காரணமாக நோயாளிகள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மேலும் அதிகப்படியான உயிரிழப்புகளும் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.

தமிழகத்தை கேட்காமல் சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு ஆக்சிஜன் அனுப்பியது குறித்து ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்குப்பதிந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. கொரோனா சிகிச்சைக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் பல மாநிலங்கள் திணறி வருகின்றன. இந்த நிலையில் தமிழக அரசிடம் தகவல் தெரிவிக்காமல், மத்திய அரசு தமிழகத்திலிருந்து 45 ஆயிரம் கிலோ ஆக்சிஜனை ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகின. வேறு மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பப்பட்டதாக எழுந்த புகாரை தாமாக முன்வந்து ஐகோர்ட் விசாரணை நடத்தி வருகிறது.

தமிழகத்தில் மருத்துவ பதற்ற நிலை எதுவும் நிலவவில்லை. தமிழகத்தில் 400 டன் ஆக்சிஜன் தயாரிக்கப்படுகிறது. தேவையான அளவு ஆக்சிஜன் உள்ளது. அரசு மருத்துவமனைகளில் 31,000 ரெம்டெசிவிர் மருந்து இருப்பு உள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தேர்தல் ஆணையத்திடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

Related Stories: