ஆசனூர் அருகே சாலையின் குறுக்கே நடமாடிய ஒற்றை யானை: வாகன ஓட்டிகள் அச்சம்

சத்தியமங்கலம்:  ஆசனூர் அருகே சாலையின் குறுக்கே ஒற்றை யானை நடமாடியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள ஆசனூர் வனப்பகுதியில் யானை, புலி,  சிறுத்தை, மான், கரடி, காட்டு மாடு உள்ளிட்ட  பல்வேறு வன விலங்குகள்  வசிக்கின்றன. வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால், யானை உள்ளிட்ட  வனவிலங்குகள் தீவனம் மற்றும்  குடிநீர் தேடி சத்தியமங்கலம் புலிகள் காப்பக  வனப்பகுதி வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய  நெடுஞ்சாலையில் சுற்றித்திரிகின்றன.

பகல் நேரங்களில் காட்டு  யானைகள் சுற்றித் திரிவதால், வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன்  சாலையில் பயணிக்க வேண்டிய நிலை  உள்ளது. இந்நிலையில், நேற்று மதியம்  வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டுயானை ஆசனூர் அருகே சீவக்காய் பள்ளம்  என்ற இடத்தில்  சாலையில் முகாமிட்டு அங்கும் இங்கும் நடமாடியதோடு சாலையோரம்  உள்ள மூங்கில் மரங்களின் தழைகளை பறித்து தின்றபடி நின்றதால், வாகன  ஓட்டிகள்  மிகுந்த அச்சமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ  இடத்திற்கு சென்றனர். அப்போது, வனத்துறை ஊழியர் ஒருவர் யானையை சத்தம்போட்டு   அதட்டியதால், காட்டு யானை  சாலையை விட்டு மெதுவாக சாலையோர வனப்பகுதிக்குச் சென்றது. வனத்துறை  ஊழியரின் சத்தம் கேட்டு  சாலையை விட்டு வனப்பகுதிக்கு யானை சென்றதைக் கண்டு  வாகன ஓட்டிகள் ஆச்சரியமடைந்தனர். இதைத்தொடர்ந்து வாகனங்கள் புறப்பட்டுச்   சென்றன.

Related Stories: