அரியலூர்: வீட்டிற்கு செல்லும் பாதையை மீட்டு தரக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு ராணுவ வீரர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மருதூர் கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன் (40). இந்திய ராணுவத்தில் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் ஹவில்தாராக ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்து வரும் இவர், கடந்த 2007ம் ஆண்டு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு 3சென்ட் வீட்டுடன் கூடிய இடத்தை வாங்கியுள்ளார். இந்நிலையில் இளவரசன் வீட்டிற்கு செல்லும் 15 அடி பொதுபாதையில் வருவாய்த்துறையில் பணிபுரியும் குமார் என்பவர் தன்னுடயை நிலம் என்று சுவர் வைத்துள்ளார். இதனால் வீட்டிற்கு செல்ல முடியாத நிலை உள்ளதால் மாவட்ட கலெக்டரிடம் இளவரசனின் தாய் சரஸ்வதி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.