வேலூரில் நோயாளிகள் பலியான விவகாரம்; 2 வாரத்துக்குள் அறிக்கை வேண்டும்: மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: வேலூரில் ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட பழுதால் 7 நோயாளிகள் பலியான விவகாரம் தொடர்பாக 2 வாரத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக மருத்துவ கல்வி இயக்குனருக்கும், மருத்துவ கல்லூரி டீனுக்கும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ், ராஜேஸ்வரி உட்பட மொத்தம் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தினகரன் நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன், சம்பவம் தொடர்பாக இரண்டு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, மருத்துவ கல்வி இயக்குனர் மற்றும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆன்லைனில் விசாரணை

மாநில மனித உரிமை ஆணையத்தில் நாளை முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே விசாரணை நடைபெறும். ஆணையத்தின் வெளியே வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் காலை 10 மணி முதல் மாலை 3 மணிக்குள் புகாரை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: