இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு புறநகர் ரயில்கள் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இயங்காது: சென்னை ரயில்வே கோட்டம் அறிவிப்பு

சென்னை: இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக புறநகர் ரயில் சேவைகளுக்கான புதிய கால அட்டவணை இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. வார நாட்களில் 434 ரயில்கள், ஞாயிற்றுக்கிழமை 86 ரயில்கள் இயக்கப்படும். இரவு 10-4 மணி வரை ரயில்கள் இயக்கப்படாது என சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிக்கை: சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கம் 150 சேவைகளும், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மார்க்கம் 64 சேவைகளும், சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கமாக 68 சேவைகளும், சென்னை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் வழித்தடங்களில் 152 சேவைகள் என மொத்தம் 434 புறநகர் ரயில் சேவைகள் வார நாட்களில் இயக்கப்படும்.

மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கம் 32 சேவைகளும், சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டை மார்க்கமாக 24 சேவைகளும், சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கமாக 12 சேவைகளும், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கம் 18 சேவைகள் என மொத்தம் 86 புறநகர் ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும். மேலும் இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 4 மணி வரை எந்த ஒரு ரயில்நிலையத்தில் இருந்தும் புறநகர் ரயில்கள் இயக்கப்படாது. இந்த திருத்தப்பட்ட புறநகர் ரயில் சேவைகளுக்கான புதிய கால அட்டவணை இன்று (வியாழக்கிழமை) முதல் அமல்படுத்தப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: