கொரோனா தடுப்பூசி, பரிசோதனை மையங்கள் அறிய புதிய இணையதளம்: மாநிலத்தில் முதன்முதலாக நெல்லையில் அறிமுகம்

நெல்லை: கொரோனா தடுப்பூசி மையங்கள், பரிசோதனை மையங்கள், மாதிரி சேகரிப்பு மையங்கள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களின் அமைவிடங்களை எளிதில் கண்டுகொள்ள, மாநிலத்திலேயே முதல்முறையாக புதிய இணையதள வசதி நெல்லையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. கொரோனாவின் பாதிப்பிலிருந்து பொதுமக்கள் தங்களை முழுமையாக பாதுகாத்துக் கொள்ள மாநிலத்திலேயே முதல் முறையாக நெல்லை மாவட்ட நிர்வாகம் https://covidcaretirunelveli.in  என்ற புதிய இணையதள வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதை நெல்லை கலெக்டர் விஷ்ணு நேற்று வெளியிட்டு பேசியதாவது:

நெல்லை மாவட்டத்தில் 83 கொரோனா தடுப்பூசி மையங்கள், 54 மாதிரி மையங்கள், 5 சோதனை மையங்கள் மற்றும் 28 கொரோனா சிகிச்சை மையங்கள் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த புதிய இணையதள வசதியின் மூலம் பொதுமக்கள், தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள தங்களுக்குத் தேவைப்படும் கொரோனா தடுப்பூசி மையம், சோதனை மையம் அல்லது கொரோனா சிகிச்சை மையம் ஆகியவற்றின் அமையவிடங்களை ஜி.ஐ.எஸ். வரைபடம் மூலம் எளிதாக கண்டுகொள்ளலாம்.

மேலும் தங்கள் இருப்பிடத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களுக்கு, செல்லும் பாதைகள் பற்றிய விபரங்களும், மையத்தின் முழு முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் போன்ற தகவல்களும் கிடைக்கும்.பொதுமக்களுக்கு கொரோனா பற்றி ஏற்படும், அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் விளக்கங்கள், இந்த இணையதளத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள, கொரோனா கட்டுபாட்டு அறையின் தொடர்பு எண்களும், அதற்குரிய வாட்ஸ்அப் எண்களும் இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் கொரோனா சம்பந்தமாக  தங்களுக்கு ஏற்படும், சந்தேகங்களை தொலைபேசி வாயிலாக கேட்டு, அதற்குரிய விளக்கங்களை எளிதாக பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராச்சலம், துணை கலெக்டர் (பயிற்சி) மகாலெட்சுமி, மாவட்ட தேசிய தகவல் மைய அலுவலர்கள் தேவராஜன், ஆறுமுகநயினார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: