விபத்துகளில் உயிரிழப்பு அதிகரிக்க அதிவேகமே காரணம்: டூ வீலர் தயாரிக்கும் போதே வேகக்கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த வேண்டும்: ஐகோர்ட் அதிரடி

சென்னை: இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் போதே வேகக்கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. வேகக்கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த இருசக்கர வாகன உற்பத்தி நிறுவங்களுக்கு அறிவுறுத்தும்படி மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2013-ல் பஸ் மோதிய விபத்தில் பெண் பல் மருத்துவர் 90 சதவிகித ஊனம் ஏற்பட்டதில் கூடுதல் இழப்பீடு கோரிய சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், விபத்துகளில் உயிரிழப்பு அதிகரிக்க அதிவேகமே காரணம் என்றும் இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும்போதே வேக கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த வேண்டும். இறக்குமதி செய்யப்படும் பைக்கிற்கும் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர்.

மேலும், வேகக் கட்டுப்பாட்டை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்.  இருசக்கர நிறுவனங்கள் தயாரிக்கும்போதே வேக கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த வேண்டும் என வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு உத்தரவிடக்கோரி மத்திய அரசுக்கு  அறிவுறுத்தியது.  எக்ஸ்பிரஸ் சாலைகளில் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் செல்லலாம் என்று 2018ம் ஆண்டு பிறபித்த உத்தரவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். பள்ளிப் பாடத்திட்டங்களில் சாலை விதிகளையும் சேர்த்து கற்றுத்தர வேண்டும். பள்ளிப் பாடங்களில் சாலைவிதிகள் குறித்து கற்றுக்கொடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்த அறிக்கையை ஆகஸ்ட் 2-ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: