பழநியில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதலாக 200 படுக்கைகள் கொண்ட வார்டு தயார்

பழநி :  தினகரன் செய்தி எதிரொலியாக பழநியில் கூடுதலாக 200 படுக்கைகள் கொண்ட வார்டு தயார் செய்யப்பட உள்ளது.

தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ளது. பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் பரவும் வேகம் அதிகரித்து வருகிறது.

இதன்படி பழநி மற்றும் தொப்பம்பட்டி பகுதியில் கடந்த 20 நாட்களில் சுமார் 250 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பழநி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை வார்டு மீண்டும் ஏற்படுத்தப்பட்டது. அதிக பாதிப்பின் காரணமாக திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழநியாண்டவர் கல்லூரியிலும் 60 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டது.

அதிகரித்து வரும் கொரோனாவால் பழநி பகுதியில் நாள்தோறும் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதன்படி பழநி அரசு மருத்துவமனையில்  சுமார் 100 பேரும், பழநியாண்டவர் கல்லூரி வளாகத்தில் 64 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 மையங்களும் நிரம்பி விட்டதால் தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சிகிச்சை இடமில்லாத சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து நேற்று தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. அதில் பழநியாண்டவர் கல்லூரியில் பயன்படுத்தப்படாமல் உள்ள கட்டிடங்களில் கொரோனா மையங்கள் ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதன் எதிரொலியாக நேற்று பழநியாண்டவர் கலைக் கல்லூரி வளாகத்தில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் ஜெயந்தி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஸ்வரி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அப்துல் வகாப் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கலையரங்கம் மற்றும் உணவக ஹால்களை கொரோனா வார்டாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக கூடுதலாக 100 படுக்கைகள் கொண்ட வார்டு உருவாக்கப்படும் என்றும், கொரோனா நோயாளிகள் வருகையை பொறுத்து மேலும் 200 படுக்கைகள் தயார் செய்யப்படும் என்றும் சுகாதாரத்துறையினரால் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: