புதுடெல்லி: கொரோனா கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை அதனை தயாரிக்கும் சீரம் நிறுவனம் இருமடங்கு உயர்த்தியது. மாநில அரசுகளே தடுப்பூசிகளை நேரடியாக கொள்முதல் செய்து கொள்ளலாம் என்று பிரதமர் மோடி தெரிவித்த நிலையில் மாநில அரசுகளுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி ரூ. 400க்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தனியார் மருத்துவமனைகளுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி ரூ. 600க்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ரஷியா, சீனா தடுப்பூசிகள் விலையை ஒப்பிட்டு சீரம் நிறுவனம் இன்று அறிக்கை வெளியிட்டது.அந்த அறிக்கையில், அமெரிக்காவில் ரூ.1,500, ரஷியா மற்றும் சீனாவில் தலா ரூ. 750க்கு மேல் கொரோனா தடுப்பூசி விற்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில அரசு அறிவித்தப்படி தங்களது உற்பத்தியில் 50%மட்டுமே மாநில அரசு அரசுகள், தனியார் மருத்துவமனைக்கு விற்கப்படும் என்றும் உற்பத்தியில் 50% மத்திய அரசுக்கு தொடர்ந்து வழங்கப்படும் என்றும் சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும் 4 அல்லது 5 மாதங்களுக்கு பிறகு கொரோனா தடுப்பூசி சில்லறையில் விற்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அறிவித்திருந்தனர். தற்போது வெளிச்சந்தையில் தடுப்பூசி விற்கப்படுவதால் மத்திய அமைச்சர்களின் வாக்குறித்து காற்றில் பறந்தது. இதனிடையே மத்திய அரசின் கட்டுப்பாடின்றி தனியார் நிறுவனங்களே தடுப்பூசி விலையை நிர்ணயித்திருப்பது பதுக்கலுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தனியார் நிறுவனங்கள் ரூ.600-க்கு தடுப்பூசி வாங்குவதால் பயனாளிகளிடம் ரூ.1,000-க்கு மேல் வசூலிக்கப்படலாம் என்றும் தெரிவித்த மருத்துவர்கள், தேவை அதிகரிக்கும் போது கொரோனா தடுப்பூசி விலை மேலும் உயர்த்தப்படும் ஆபத்து இருப்பதாக தெரிவிக்கின்றனர்.இதனிடையே தனியார் மருத்துவமனையில் ஒரு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.250க்கும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடப்படுகிறது.