×

சுயமாக முடிவெடுங்கள்!

நன்றி குங்குமம் தோழி

பெரிதாக கனவு காண், அதை செயல்படுத்து என்பதே எனது தந்தை எனக்கு சொல்லிக்கொடுத்த தாரக மந்திரம் என்கிறார் ஐ.ஏ.எஸ் அதிகாரியான கோமல் கனத்ரா.குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள சவர்குண்டலா கிராமம் தான் கனத்ரா பிறந்து வளர்ந்த ஊர். அவரின் அப்பா அந்த கிராமத்தின் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.  தனது மகள் கோமல் கனத்ராவுக்கு சிறுவயதில் அளித்த சுதந்திரம் தான் அவரை ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்ற தூண்டியுள்ளது.

இந்தி, சமஸ்கிருதம், ஆங்கில இலக்கியத்தில் 3 பட்டங்கள் பெற்றுள்ள கனத்ரா கூடவே ஆசிரியர் பயிற்சியும் பெற்றார். இதையடுத்து கடந்த 2008ம் ஆண்டு அவருக்கு திருமணம் நடந்தது. அவரது கணவர் நியூசிலாந்தில் பணியாற்றி வந்தார். திருமணம் ஆன 15 நாட்களில் அங்கு சென்ற கணவர் மீண்டும் திரும்பி வரவேயில்லை. ஆனால் கணவரின் தாயோ, கோமலிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார். ஏழை ஆசிரியரான அவரது தந்தையால் சம்மந்தி கேட்ட வரதட்சணையை கொடுக்க முடியவில்லை. கனத்ராவை மாமியார் வீட்டை விட்டு விரட்டியடித்தார்.

இதையடுத்து கோமல் அருகேயுள்ள பாவ் நகருக்கு இடம்பெயர்ந்தார். அங்கு ரூ.5 ஆயிரம்  சம்பளத்தில் ஆசிரியை பணியில் சேர்ந்தார். இந்த சம்பளத்தை கொண்டு வாழ்வை நகர்த்த முடியாது என உணர்ந்த கனத்ரா தன்னை கலெக்டராக பார்க்க வேண்டும் என்ற தந்தையின் சிறுவயது கனவை நிறைவேற்ற தீர்மானித்தார். இதற்காக அவர் கடுமையாக பயிற்சி எடுக்க ஆரம்பித்தார். வார நாட்கள் ஆசிரியர் பணியில் ஈடுபடுவார். வார இறுதி நாட்களில் அகமதாபாத்திற்கு சென்று அங்கு ஐ.ஏ.எஸ் பயிற்சி பெற்றார்.

பயிற்சியில் சொல்லிக் கொடுப்பதை மிகவும் கவனமாக மனதில் பதிவு செய்து கொள்ள ஆரம்பித்தார். காரணம் அவர் வசிக்கும் கிராமத்தில் ஆங்கில நாளிதழ்களோ அல்லது இன்டர்நெட் வசதியோ கிடையாது. மேலும் பாட புத்தகங்கள் வாங்கி படிக்கவும் அவருக்கு போதுமான வருமானம் இல்லை.

இருந்தாலும் சொல்லிக் கொடுக்கும் பாடத்தை குறிப்பு எடுத்துக் கொண்டு தீவிரமாக இரவும் பகலுமாக படித்தார். பின்னர் தனியொருவராய் மும்பை சென்று தேர்வு எழுதினார். தேர்வில் 591வது ரேங்க் பெற்று வெற்றியும் பெற்றார். தற்போது டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

மறுமணம் செய்து கொண்டுள்ள கனத்ராவுக்கு இரண்டரை வயதில் டாக்ஸ்வி என்ற மகள் உள்ளார். வெற்றிக்கனியை சுவைத்த கோமல் கனத்ரா பெண்களுக்கு கூறும் அறிவுரை ஒன்றே ஒன்று தான், ‘யாரையும் எதற்காகவும் சார்ந்திருக்காதீர்கள். சுயமாக முடிவு எடுங்கள் வாழ்வை வளமாக்குங்கள்’ என்கிறார்.

பா.கோமதி

Tags :
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!