காட்பாடி அருகே ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை!: பட்டாசு வெடி விபத்தில் 2 குழந்தைகள் இறந்ததால் தாய் பரிதாப முடிவு..!!

வேலூர்: வேலூர் அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த 2 குழந்தைகளின் தாயார் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரியில் பட்டாசு கடையில் கடந்த 18ம் தேதி ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி கடையின் உரிமையாளர் மோகன் மற்றும் அவரது 5 வயது பேரக்குழந்தை தேஜஸ், 8 வயது பேரக்குழந்தை தனுஷ் ஆகியோர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். இச்சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியும், துயரமே மறையாத நிலையில், கடந்த 2 நாட்களாக வேதனையில் தவித்து வந்த குழந்தைகளின் தாய் வித்யாலட்சுமி, இன்று அதிகாலை லத்தேரி அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

தனி தாலுக்கா மற்றும் தொகுதியாக உள்ள கே.வி.குப்பத்தில் தீயணைப்பு நிலையங்கள் இல்லாததே தீயை அணைக்க தாமதமானதாகவும், 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்பாடியில் இருந்தே தீயணைப்பு வாகனங்கள் வரவேண்டிய நிலை உள்ளதாகவும் கூறப்பட்டது. பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் இதுவரை தீயணைப்பு நிலையம் அமைக்கப்படாதது மூவரின் உயிரை பறித்த நிலையில், தற்போது குழந்தைகளை பறிகொடுத்த தாயும் தற்கொலை செய்திருப்பது அப்பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories: