கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத வகையில் உச்சபட்ச அளவில் ஆக்சிஜன் சிலிண்டரை ஏற்றுமதி செய்த மத்திய அரசு!!

டெல்லி : கொரோனா தொற்றாளர்களுக்கு தற்போது ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு உச்சபட்ச அளவில் ஆக்சிஜன் சிலிண்டரை ஏற்றுமதி செய்து வந்தது தெரியவந்தது. பல மாநிலங்களில் மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டருக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், 50,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் 2020-2021ம் நிதி ஆண்டில் முதல் 9 மாதங்களில் மட்டும் 9, 300 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சிலிண்டரை மத்திய அரசு ஏற்றுமதி செய்துள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத உச்சம் என்பதும் தெரியவந்துள்ளது.

2வது அலை கொரோனா பரவலை எதிர்கொள்ள மத்திய அரசு முன்கூட்டியே திட்டமிடவில்லை என்பதையே இது காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. நிலைமை கைமீறி போன சூழலில் தொழிற்சாலைகளுக்கான ஆக்சிஜன் விநியோகத்தை நாளை முதல் நிறுத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் ஒரு நாள் ஆக்சிஜன் உற்பத்தி மதிப்பு 7,127 மெட்ரிக் டன் என்ற நிலையில், கடந்த 18ம் தேதி நிலவரப்படி அதிகபட்சமாக நுகர்வாக 4,300 மெட்ரிக் டன் பதிவானது. இதற்கு முன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3,100 மெட்ரிக் டன் என்பதே நாட்டின் உச்சபச்ச ஆக்சிஜன் நுகர்வாக இருந்தது. இந்த நிலையில், நாடு முழுவதும் ஆக்சிஜன் விநியோகத்தை சீரமைக்க பிரத்யேக ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களை மத்திய அரசு இயக்கி வருகிறது.

Related Stories: