யோகி பாபு நடித்த மண்டேலா படத்துக்கு மறு தணிக்கை கோரி வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

சென்னை: நடிகர் யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படத்தை மறு தணிக்கை செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு முடி திருத்துவோர் சங்கம் சார்பில் தாக்கல் செய்யபட்ட மனுவில், மருத்துவர் சமுதாயம் என்பது மிகவும் பிற்படுத்தபட்ட சமூகத்தை சேர்ந்ததாகும். காமெடி நடிகர் யோகி பாபு நடிப்பில் வெளிவந்த மண்டேலா திரைப்படம் ஏப்ரல் 4ம் தேதி தனியார் தொலைக்காட்சியில் நேரடியாக  வெளியானது.

இந்த படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை கழிவறையை கழுவச் செய்வது போன்ற காட்சிகளும், முடி திருத்தும் தொழிலாளியை செருப்பால் அடிப்பது, காரில் ஏற அருகதை இல்லை என்று காரின் பின்னே ஓடி வர சொல்வது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதனை தணிக்கை குழு தணிக்கை செய்ய தவறி விட்டது. மேலும், இந்த காட்சிகள் மற்றும் வசனங்கள் மருத்துவர் சமுதாய மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. எனவே இந்த படத்தை மீண்டும் தணிக்கை செய்யவேண்டும். சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்க படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.c

Related Stories: