பல்கலை, கல்லூரிகள் ஆன்லைனில் தேர்வு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் மீண்டும் கொரோனோ தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, அரசு 18ம் தேதி மீண்டும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இரவு நேர ஊரடங்கையும் அறிவித்துள்ளது. இதையடுத்து, பள்ளி கல்லூரிகள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் பள்ளி, கல்லூரிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உயர்கல்வித்துறை மேற்கண்ட அரசு அறிவிப்பை பின்பற்றி அரசாணை வெளியிட்டுள்ளது.

உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து கல்வி நிறுவனங்களும் கொரோனா பாதுகாப்பு விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அதன்படி, பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் தங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த அனுமதிக்க வேண்டும். தேர்வுகளை பொறுத்தவரையில்  அரசு பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்த வேண்டும். அனைத்து கல்வித் தொடர்பான பயிற்சி நிறுவனங்களும் அரசு மற்றும் தனியாராக இருந்தாலும் பயிற்சி வகுப்புகளை ஆன்லைன் மூலம் தான் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

Related Stories: