மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை: தடையின்றி தடுப்பூசி போடப்படுகிறது; அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை என்றும், பொதுமக்களுக்கு தடையின்றி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ்.வளாகத்தில் உள்ள ெபாது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துவ துறையின் மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு குளிர்பதன நிலையத்திற்கு வந்த 6 லட்சம் கோவிஷீல்டு மருந்தினை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து அமைச்சர் விஜபாஸ்கர் அளித்த பேட்டி: தமிழகத்தில் 4.487 தடுப்பூசி மையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த மையங்களுக்கு தொடர்ந்து தடுப்பூசி கொடுத்து கொண்டு இருக்கிறோம். தமிழகத்தில் தடை இல்லாமல் தடுப்பூசி கொடுக்கப்பட்டு வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஒரு லட்சம் கோவாக்ஸின் வந்தது. அது எல்லா மையங்களுக்கும் கொடுக்கப்பட்டது. தற்போது 6 லட்சம் கோவிஷீல்டு மருந்தை மத்திய அரசிடம் பெற்றுள்ளோம். தமிழகத்தில் இதுவரை 55 லட்சத்து 85 ஆயிரத்து 720 தடுப்பூசிகள் முழுமையாக பெறப்பட்டுள்ளது. 48 லட்சத்துக்கு 7 ஆயிரத்து 148 தடுப்பூசிகளை முழுமையாக போட்டு இருக்கிறோம். இன்றைக்கு 6 லட்சம் வந்திருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரைக்கும் எல்லா அரசு தடுப்பூசி மையங்களிலும் முழுமையாக கொடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஆர்வமாக தடுப்பூசி மையங்களுக்கு வந்து தடுப்பூசி போடும் நிலை உள்ளது.

தடுப்பூசி போடும் போது வதந்தி கிளம்புவது இயல்பு தான். அரசு சார்பில் ஒரு சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தியதனால், இன்றைக்கு அனைவரும் தடுப்பூசி எடுத்து கொண்டு இருக்கிறோம். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதனை கட்டுப்படுத்தலாம். வெஸ்டேஜ்ஜை கட்டுப்படுத்த செலியர்களுக்கு அறிவுரை கொடுக்கப்பட்டுள்ளது. வருகிற 1ம் தேதியில் இருந்து 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி கொடுக்கும் போது வேஸ்டேஜ் வருவதற்கான வாய்ப்பு ரொம்ப குறைவு. தமிழகத்தை பொறுத்தவரை 240 டன் ஆக்ஸிஜன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆக்ஸிஜன் அதிகப்பட்ச 400 டன்னாக உள்ளது. 1200 டன் இருப்பு வைத்துள்ளோம். எனவே தமிழகத்தை பொறுத்தவரைக்கும் இதுவரைக்கும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை. வேலூரில் ஏற்பட்ட சம்பவம் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் ஏற்பட்ட சம்பவம் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: