சென்னை: ஐபிஎல் தொடர் 14வது சீசனின் 14வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் சென்னையில் இன்று மோதுகின்றன. கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ், வான்கடே மைதானத்தில் விளையாடிய 3 ஆட்டங்களில் முதல் ஆட்டத்தில் ராஜஸ்தானை நூலிழையில் வீழ்த்தியது. அடுத்த 2 ஆட்டங்களிலும் சென்னை, டெல்லி அணிகளிடம் மண்ணைக் கவ்வியது. மும்பை போட்டிகளை முடித்துக் கொண்டு சென்னை வந்துள்ள பஞ்சாப், இங்கு வெற்றியுடன் தொடங்க திட்டமிட்டுள்ளது. கடந்த 3 ஆட்டங்களிலும் ஆரம்பம் சிறப்பாக இருந்தாலும், வெற்றிகரமாக முடிப்பதில் தடுமாற்றம் இருக்கிறது. நடப்புத் தொடரில் அதிக ரன் குவித்த அணியான பஞ்சாப், பந்துவீச்சில் மட்டும் இன்னும் வேகம் பெறவில்லை. ராகுல், மயாங்க், கேல், ஹூடா, தமிழக வீரர் ஷாருக் கான் ஆகியோர் வழக்கம்போல் கலக்கினால், எதிரணிக்கு நெருக்கடி தான். அதே சமயம், வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஹாட்ரிக் தோல்வியுடன் கடைசி இடத்தில் பின்தங்கியுள்ளதால், முதல் வெற்றிக்காக வரிந்துகட்டுகிறது.