சென்னை: தமிழகம் முழுவதும் காய்கறி மார்க்கெட்டுக்கு இரவு நேரத்தில் வரும் சரக்கு வாகனங்களுக்கு தளர்வு அளிக்க வேண்டும் என்று விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அத்தியாவசியப் பொருட்கள் விநியோகக்குழு தலைவர் ககன்தீப்சிங் பேடியை நேற்று நேரில் சந்தித்து மனு அளித்தார். அப்போது மாநில பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா, மாநில தலைமைச் செயலாளர் ஆர்.ராஜ்குமார், கோயம்பேடு வணிக வளாக கூட்டமைப்புத் தலைவர் ஜி.டி.ராஜசேகர், கோயம்பேடு செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.
அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கொரோனா 2ம் அலை பாதிப்பு காரணமாக பல்வேறு அரசு கட்டுப்பாடுகள் வணிகம், மற்றும் பொதுமக்கள் மீது நேற்றைய தினம் விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கான அத்தியாவசிய சந்தைகளான குறிப்பாக கோயம்பேடு காய்கறி, பழம், மற்றும் மலர் வணிகச் சந்தை எப்போதும் போல் எவ்வித புதிய குறுக்கீடுகளும் இல்லாது, இரவு நேரங்களில் காய்கறி, பழம், மலர் போக்குவரத்துக்கு அனுமதித்திட பேரமைப்பு கோரிக்கையை முன்வைக்கின்றது. அழுகும் பொருளான எனவே, காய்கறிகளை சந்தைக்கு கொண்டு வரும் வாகனங்களுக்கும் உரிய அனுமதி அளித்து, தடையேதுமின்றி சந்தைக்கு காய்கறிகள் வரத்தை உறுதிபடுத்த வேண்டுகிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.