நாகை: நாகை மாவட்டம் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாகை இஜிஎஸ் பிள்ளை இன்ஜினியரிங் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 3 ஷிப்ட்களாக ஒரு ஷிப்டுக்கு 80 போலீசார் வீதம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையில் 150 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டிடத்தின் மீது ட்ரோன் கேமரா பறந்ததை அங்கிருந்த திமுக கூட்டணி கட்சி ஏஜென்டுகள் பார்த்தனர்.
சந்தேகமடைந்த அவர்கள் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அந்த ட்ரோன் கேமராவை சுட்டு வீழ்த்தி பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் அந்த ட்ரோன் கேமரா வளாகத்தின் உள்ளேயே விழுந்தது. போலீசார் அதை கைப்பற்றி உயரதிகாரிகளுக்கு தெரிவித்தனர். தகவல் அறிந்த திமுக மற்றும் கூட்டணி கட்சியினர்அங்கு திரண்டனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைகளில் கண்காணிப்பு கேமரா செயல்படாமல் உள்ளது. தற்போது ட்ரோன் கேமரா பறக்க விடப்படுகிறது. இது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றுவதற்கான முயற்சி போல் தெரிகிறது என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த டிஎஸ்பி சரவணன் தலைமையிலான போலீசார் வந்து அனைவரையும் சமாதானம் செய்தனர்.