திருவனந்தபுரம்: பாகிஸ்தானில் இருந்து படகில் கடத்தி வரப்பட்ட ரூ.3,000 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள், கேரள கடலில் பறிமுதல் செய்யப்பட்டது. கேரள மாநிலம், கொச்சி அருகே அரபிக்கடலில் இந்திய கடற்படையினர் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, இலங்கையை சேர்ந்த மீன்பிடி படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. சந்தேகம் அடைந்த கடற்படையினர் அதை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 300 கிலோ ஹெராயின் போதைப் பொருள் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.3 ஆயிரம் கோடி. பாகிஸ்தானில் உள்ள மக்ரானில் இருந்து இது கடத்தி வரப்பட்டுள்ளது. இந்த போதை பொருளை இந்தியா, இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது. படகில் இருந்த இலங்கையை சேர்ந்த 5 பேரையும் கடற்படையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர்.