கொரோனாவுக்கு எதிரான போரில் கடைசி ஆயுதமே ஊரடங்கு: முழு ஊரடங்கிற்கு தற்போது அவசியம் இல்லை...பிரதமர் மோடி உரை.!!!

டெல்லி: நாட்டில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, புயல் வேகத்தில் கொரோனா 2ம் அலை நம்மை தாக்குகிறது. இந்த தருணத்தில் முன்களப்பணியாளர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். நான் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக உங்களது துக்கத்தில் பங்கேற்கிறேன். இந்தியா மீண்டும் கொரோனாவுக்கு எதிராக போராடுகிறது. நாம் அனைவரும் இந்த நேரத்தில் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இரவு பகல் பாராமல் மக்கள் நலனுக்காக அரசு செயல்பட்டு வருகிறது.

மாநில அரசுகளுடன் இணைந்து கொரோனாவை ஒழிக்க மத்திய அரசு செயல்படுகிறது. உயிர்களைக் காப்பாற்றுவதே மத்திய, மாநில அரசுகளின் முதன்மை இலக்கு. புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு மாநில அரசுகள் உறுதியளிக்க வேண்டும். முழு ஊரடங்கிற்கு தற்போது அவசியம் இல்லை. அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம். தடுப்பூசி எடுத்துக்கொண்டாலும், சுய கட்டுப்பாடுடன் மக்கள் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

கொரோனாவுக்கு எதிரான போரில் கடைசி ஆயுதமே முழு ஊரடங்கு என்று மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.  நாட்டு மக்கள் கவனமாக இருந்தால் இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்த அவசியம் இருக்காது. மாநிலங்கள் முடிந்த வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதை தவிர்க்க வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு தீர்வாகாது. நோய் பாதிப்பு உள்ள இடங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். கடந்த ஆண்டு இருந்த மோசமான சூழ்நிலை இரண்டாம் கொரோனா அலையில் இல்லை என்றார்.

Related Stories: