டெல்லி: நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி இன்று இரவு 8.45 மணிக்கு உரையாற்றுகிறார். இந்தியாவில் கொரோனா 2ம் அலை தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், மாநில முதல்வர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என முக்கிய தலைவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 1,53,21,089 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,80,530 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் 7 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கொரோனா தடுப்பூசி 45 வயதிற்கு மேற்பட்டோர்களுக்கு போடப்பட்டு வரும் நிலையில் வரும் மே1-ம் தேதி முதல் 18 வயது மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா பரவல் குறித்து, தடுப்பூசி தயாரிப்பு குறித்து பிரதமர் மோடி 2 நாட்களாக தொடர்ந்து நாட்டின் சிறந்த மருத்துவர்கள், மருந்து நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று மாலை 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசி போடும் திட்டமிடப்பட்டுள்ளது குறித்து தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதனை தொடர்ந்து, நாட்டு மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8.45 மணிக்கு உரையாற்றுகிறார். கொரோனா 2வது அலை குறித்து மக்களுக்கு அறிவுரை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் குறித்து என்ன பேச போகிறார் என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. எனவே,கொரோனா தொற்று அதிகம் பரவும் நிலையில் பிரதமர் மோடியில் உரை முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.