சென்னை: நெடுஞ்சாலை துறை மண்டல கணக்காளர்கள் பணிக்கான தேர்வு முறைகேடு குறித்து வழக்கறிஞர் எம்.எல்.ரவி தொடர்ந்தவழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு ஜூன் 2-வது வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. நெடுஞ்சாலை துறை மண்டல கண்காணிப்பாளர் பணி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நெடுஞ்சாலை துறை மண்டல கணக்காளர்கள் பணி நியமனத்தில் 2016ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் எம்.எல்.ரவி பொது நல வழக்கு தொடர்ந்தார். அந்த தேர்வில் தேர்வான 10 பேரின் தேர்வை ரத்து செய்ய அரசு செயலாளர் பரிந்துரை செய்திருந்ததாகவும், ஆனால் நெடுஞ்சாலை துறை இயக்குனர் 8 பேரின் தேர்ச்சியை மட்டுமே ரத்து செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளது கண்டறியப்பட்டு 16 பேரின் தேர்வுகள் முடிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தலைமை கண்காணிப்பாளர் உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளார். மேலும் முறைகேடுகளில் தொடர்புடையவர்கள் பதவி இறக்கம் செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.