காடையாம்பட்டி : காடையாம்பட்டி அருகே கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி சேபெருமான்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (70), விவசாயி. இவர் வீட்டருகே மாட்டு கொட்டகை அமைத்து உள்ளார். அதில் அறுவடை செய்த மஞ்சள், மாட்டுத் தீவனம் சோளத்தட்டு உள்ளிட்டவற்றை அடுக்கி வைத்திருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில், மர்ம நபர்கள் மாட்டு கொட்டகைக்கு தீ வைத்துள்ளனர். இதில் கொட்டகை, தீவனங்கள் மற்றும் மஞ்சள் தீப்பிடித்து எரிந்தது.அக்கம்பக்கத்தினர் 3 மணிநேரம் போராடி தீயை அனைத்தனர். இதில், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான மஞ்சள் மற்றும் மாட்டு தீவனங்கள் எரிந்து சேதமானது.
இதுகுறித்து கிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் பிரபாவதி விசாரணை நடத்தி வருகிறார். வடமனேரி பகுதியில் இரவு பகலாக ஒரு கும்பல் சீட்டு ஆடுதல், மது விற்பனையில் ஈடுபடுவதால் ஆட்கள் நடமாட்டம் உள்ளது. அவர்கள் தீ வைத்து சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.