கொரோனா முதல் அலையை விட 2வது அலையில் ஆக்சிஜன் தேவை அதிகரிப்பு

டெல்லி: கொரோனா முதல் அலையின் போது இருந்ததை விட 2வது அலையில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளை வெளியிட்டு பேசிய இந்திய மருத்துவ கவுன்சில் இயக்குனர் பல்ராம் பார்கவா, முதல் அலையின் போது 41.1% நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டதாகவும், 2வது அலையின் போது இது 54.5%ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருவது இதற்கு காரணமாக இருக்கலாம் என அவர் தெரிவித்தார். எனினும் வெண்டிலேட்டர் தேவைகள் முதல் அலையின் போது 37.3 சதவீதமாக இருந்ததாகவும், ஆனால் 2வது அலையின் போது இது 27.7 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் பல்ராம் பார்கவா தெரிவித்தார். கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் தொழிற்சாலைகளுக்கு அவற்றை விநியோகிப்பதற்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 9 வகையான தொழிற்சாலைகளில் மட்டுமே இனி ஆக்சிஜனை பயன்படுத்த அனுமதி அளித்து, மற்ற தொழிற்சாலைகளில் அதன் விநியோகத்திற்கு அரசு தடை விதித்திருக்கிறது.

Related Stories: