சென்னை: சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் பழனிசாமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த பிப்ரவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை தமிழகம் முழுவதும் சென்று சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் சேலம் மாவட்டத்தில் உள்ள தனது எடப்பாடி தொகுதியில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி வாக்களித்தார். தேர்தல் முடிந்த பிறகு அங்கேயே சிறிது நாட்கள் தங்கி ஓய்வு எடுத்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சேலத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார்.
சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் காலை சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். அதில், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, இன்று முதல் தினசரி இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதற்கிடையே, முதல்வருக்கு சில நாட்களாக தீவிர வயிறு வலி இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை, சூளைமேட்டில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வயிறு பகுதியில் ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்தனர்.