வாக்கு இயந்திரங்கள் வைத்துள்ள இடத்தில் லேப்டாப்புடன் மர்ம நபர்கள்: திருப்போரூர் அருகே பரபரப்பு

சென்னை: திருப்போரூர் அருகே வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரி அறையின் பக்கத்து அறையில் மடிக்கணினியுடன் மர்ம  நபர்கள் இருந்ததால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருக்கழுக்குன்றம் அடுத்த தண்டரை கிராமத்திலுள்ள ஆசான் கல்லூரியில்  திருப்போரூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திருப்போரூர் தொகுதி  வாக்கு பதிவு இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும் அறைக்கு அருகில் நேற்று யாரோ ஒரு சிலர் மடிக்கணினி வைத்துக்கொண்டு வேலை பார்த்ததாக  கூறப்படுகிறது. இது குறித்த தகவலறிந்த திருப்போரூர் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் எஸ்.எஸ்.பாலாஜி மற்றும் பாமக  வேட்பாளர்  திருக்கச்சூர் ஆறுமுகம் ஆகியோர் தங்களது முகவர்களுடன் ஆய்வு செய்தனர்.

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்  எஸ்.எஸ்.பாலாஜி  நிருபர்களிடம் கூறியதாவது: வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள  அறைக்கு பக்கத்தில் உள்ள ஒரு அறையில் சிலர்  ஏதோ பணியில் ஈடுபட்டிருந்ததாக தகவல் வந்தது. இதையடுத்து எனது  முகவர்கள் சென்று  பார்த்தபோது 4 பேர் இருந்துள்ளனர். அதில், இரண்டு பேர் ஓடியுள்ளனர். அவர்களிடம் மடிக்கணினி இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ச்சியாக இது  போன்ற சம்பவங்கள் பல இடங்களில் நடந்து வருகிறது. இந்த சம்பவங்களால் தேர்தல் ஆணையத்தின் மீது மக்களுக்கு ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.  இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: