புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமெடுத்துள்ளது. நிலைமை மோசமடைந்து வருவதால், பேரிடரை சமாளிக்கும் தேசிய ரீதியிலான கொள்கையை வகுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதுதொடர்பாக, காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனீஷ் திவாரி, ஜனாதிபதிக்கு டிவிட்டரில் கோரிக்கை வைத்துள்ளார். ‘கொரோனா தொற்றில் இந்தியா தற்போது ஆபத்தான கட்டத்தில் உள்ளது. தடுப்பூசி திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை. போதுமான ஆக்சிஜன், படுக்கை வசதிகள், உயிர் காக்கும் மருந்துகள் போன்றவை எல்லா இடங்களிலும் பற்றாக்குறையாக உள்ளது. ரோம் எரிந்துகொண்டிருந்தபோது பிடில் வாசித்த நீரோ மன்னனைப் போல, மக்களை காக்க வேண்டிய பாஜ அரசாங்கம் மேற்கு வங்கத்தேர்தலில் பிசியாக உள்ளது.