இன்று முதல் இரவு நேர ஊரடங்கு எதிரொலி: அரசு விரைவு பேருந்துகள் பகலில் மட்டும் இயங்கும்: ஞாயிற்றுக்கிழமையில் சேவை ரத்து: அரசு உத்தரவு

சென்னை: இரவு நேர ஊரடங்கு உத்தரவை அடுத்து அரசு விரைவுப் பேருந்துகள் இன்று முதல் பகலில் மட்டும் இயங்கும். வெளி மாநிலம்,  மாவட்டத்துக்கு இடையே இரவில் தனியார் பஸ் சேவைக்கு அனுமதி இல்லை. அத்துடன் மாநகர பஸ்களில் நின்று பயணம் செய்ய தடை விதித்து  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பு: கொரோனா தொற்று பரவுவதை தடுத்திட  மத்திய அரசு வழிக்காட்டுதலின்படி, தமிழக அரசு சார்பில் ஊரடங்கு உத்தரவு, கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அமலில் இருந்து வருகிறது.  கொரோனா  தொற்று பரவல் நிலை தற்போது அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துகின்ற வகையில், 20ம் தேதி (இன்று) முதல் இரவு நேர  ஊரடங்கினை அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவில், இரவு நேரங்களில் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்து சேவை  இயங்கிட அனுமதி இல்லை. பகல் நேரங்களில் இயக்கப்படுகின்ற பேருந்து சேவைகளில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம்  அணிதல், உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்தல், கூட்ட நெரிசலை தவிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தவறாமல் பின்பற்ற  வேண்டும்.

அரசு விதித்துள்ள இரவு நேர ஊரடங்கினைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு வசதியாக சென்னையிலிருந்து குறுகிய மற்றும் தொலைதூர  ஊர்களுக்கும், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கும் இயக்கப்படுகின்ற பேருந்துகள் அதிகாலை 4 மணி தொடங்கி இரவு 8 மணிக்குள்ளாக  சென்றடைகின்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசு விடுமுறையான  ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  அன்றைய தினம் பஸ்கள் இயக்கப்படமாட்டாது.  இந்த வசதியினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு உரிய வழிமுறைகளை பின்பற்றி  பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள பயணிகள், தங்களின்  விருப்பத்திற்கு ஏற்றவாறு பயண தேதியை மாற்றி அமைத்துக்கொள்ள ஏதுவாக, அருகே உள்ள பேருந்து நிலைய கட்டுப்பாட்டு அலுவலகத்தை அணுகி  தகுந்த மாற்று ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

அப்படி இல்லாத பட்சத்தில் அக்கட்டணத் தொகையானது திருப்பி வழங்கப்படும். தளவழி முன்பதிவு செய்த பயணிகள் தளவழி மூலமாக  பயணக்கட்டணத்தை திரும்பப்பெற வசதி செய்யப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள ஞாயிற்றுக்கிழமையில் முன்பதிவு செய்துள்ள  பயணிகளுக்கும் மேற்குறிப்பிட்ட நடைமுறையே பின்பற்றப்படும். சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தை பொறுத்தமட்டில், பயணிகள் நின்று  கொண்டு பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.  மேலும், அரசு  விதித்துள்ள இரவு ஊரடங்கினை பின்பற்றி அதிகாலை 4 மணி தொடங்கி இரவு 10 மணி வரையிலும், பேருந்துகள் இயக்கப்படும்.  இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: