சென்னை: தடுப்பூசி தயாரிப்பில் செங்கல்பட்டு இந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை ஈடுபடுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடிதம் எழுதியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இதையடுத்து, நேற்று முன்தினம் வரை 47,05,473 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தற்போது பொதுமக்கள் அதிகளவில் தடுப்பூசி போட்டுக்கொள்வதால், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு ஏற்ப, தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் 20 லட்சம் தடுப்பூசிகள் கேட்கப்பட்ட நிலையில் நேற்று காலை ஐதராபாத்தில் இருந்து 1 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது. தேவையான தடுப்பூசிகள் இன்று வந்துவிடும் என்று தெரிவிக்கப்படுகிறது.