தமிழகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்ற வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரை: தமிழகத்திலுள்ள அங்கீகரிக்கப்படாத தலைவர்கள் சிலைகளை அகற்றுவது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சையை சேர்ந்த வைரசேகர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்; தமிழகத்தில் சாலைகள் மற்றும் பொது இடங்களில், தலைவர்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. சில சிலைகளை, அனுமதி பெற்றும், சிலவற்றை, அனுமதி இன்றியும் வைத்துள்ளனர்.

அத்தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாளில் கட்சிகள், அமைப்புகளைச் சார்ந்தவர்கள் மாலை அணிவிக்கின்றனர்.அப்போது, போக்குவரத்து நெரிசலால் மக்கள் சிரமப்படுகின்றனர். சிலைகளை யாராவது சேதப்படுத்தினால், சமூக ஒற்றுமை பாதிக்கிறது. சில இடங்களில், சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டியது, அரசின் கடமை. தமிழகத்தில், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றவும், அனுமதி பெற்ற சிலைகளின் அருகிலுள்ள ஏணிகளை அகற்றவும், தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு நீதிபதிகள் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்துக்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். அதாவது அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி தலைவர்கள் சிலைகளை அகற்ற வேண்டும். அனுமதிக்கப்படாமல் தமிழகத்தில் உள்ள பல்வேறு சிலைகள் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அனுமதிக்கப்பட்டுள்ள சிலைகளின் வரைமுறைகள் என்ன?

மேலும் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றுவதற்கு, தேசிய நெடுஞ்சாலைத்துறை சட்டத்தின்படி வழிவகை உள்ளதையும், ஏற்கெனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளதையும் சுட்டிக்காட்டி உத்தரவிட்டனர்.

Related Stories: