திருச்சி ரயில்வே மருத்துவமனையில் தடுப்பூசி தட்டுப்பாடு; கடந்த 2 நாட்களாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்..!

திருச்சி: திருச்சி ரயில்வே மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிகள் தீர்ந்து விட்டதால் கடந்த 2 நாட்களாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. திருச்சியில் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து வருகிறது. அங்கு நேற்று மட்டும் 311 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,884-ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 16,605- பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் சிகிச்சை பலனின்றி 196 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது திருச்சியில் 2,083 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கிருமி தொற்று வேகமாக பரவுவதால் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் மருத்துவமனைகளில் போதிய தடுப்பூசிகள் இல்லை என்று புகார் எழுந்துள்ளது. பொன்மலையுள் உள்ள மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் கடந்த 2 நாட்களாக அங்கு தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி பற்றாக்குறையால் 2-வது டோஸ் செலுத்த முடியாமல் பலர் தவித்து வருகின்றனர்.

ஊழியர்களை தடுப்பூசி செலுத்தும் படி ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் மருத்துவமனையில் தடுப்பூசி கிடைக்காததால் ரயில்வே ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இந்த பிரச்சனைக்கு மாவட்ட நிர்வாகம் விரைந்து தீர்வு காண வேண்டும் என்று ரயில்வே ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: