கொரோனாவின் தாக்கம் எதிரொலி: கடும் சரிவில் இந்திய பங்குச்சந்தைகள்; வாடிக்கையாளர்களுக்கு ரூ. 4 லட்சம் கோடி நஷ்டம்!!

மும்பை : இந்தியாவில் கொரோனா பரவல் 2ம் அலை இன்றைய பங்குச் சந்தையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸில் காலையில் வர்த்தகம் தொடங்கிய உடனேயே வங்கி மற்றும் நிதி சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் மளமளவென சரிய தொடங்கின. குறிப்பாக இண்டஸ் இண்ட் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கிகளின் பங்குகள் குறைந்தன. அத்துடன் ஏற்கனவே லாபத்தில் பங்குகளை விற்பனை செய்து இருந்த சன் பார்மா, டிசிஎஸ், டாக்டர் ரெட்டிஸ், இன்போசிஸ் மற்றும் எச்சிஎல் டெக்னோலஜி ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் வீழ்ச்சி கண்டன.

காலை 11 மணியின் போது, சென்செக்ஸ் 1100 புள்ளிகள் குறைந்து 47,748 புள்ளிகளாக இருந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் பங்குகள் விற்பனையில் சரிவை சந்தித்தது. வர்த்தகம் தொடங்கியதும் 297 புள்ளிகள் குறைந்து 14,300 புள்ளிகளாக நிலைக் கொண்டது. கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது, இன்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்களுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வெள்ளியன்று அனைத்து பங்குகளையும் சேர்த்து அதன் மதிப்பு ரூ. 205 லட்சம் கோடியாக இருந்தது. இன்று அது ரூ. 201 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.

Related Stories: