தேர்தல் வெற்றிக்காக திருப்பதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரார்த்தனை : அதிமுக யாருக்கும் அடிமை இல்லை என பேட்டி

திருப்பதி : அதிமுக யாருக்கும் எப்போதும் அடிமையாக இருக்காது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். பின்னர் கோயிலுக்கு வெளியே நிருபர்களிடம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது: தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பில்லை. தமிழகத்தில் மீண்டும் 3வது முறையாக அதிமுக அரசு பதவியேற்கும். முதல்வராக எடப்பாடி பழனிசாமி மீண்டும் பதவியேற்பார்.

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் யாருக்கும் அடிமையாக இல்லை. தேர்தல் நேரத்தில் எவ்வாறு சுயமாக செயல்பட்டோம் என்பது அனைவரும் பார்த்திருப்பார்கள். சுயமாக சிந்தித்து தொண்டர்களை நம்பி செயல்படக்கூடிய மாபெரும் இயக்கம் அதிமுக. இவ்வாறு அவர் கூறினார்.தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணும் தேதி நெருங்கி வரும் நிலையில், ராஜேந்திர பாலாஜி திருப்பதி கோவிலுக்கு சென்று வெற்றிக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

Related Stories: