57 வளரும் நாடுகளில் 45 சதவீத பெண்கள் ‘நோ’சொல்ல முடியாது: ஐநா மக்கள் தொகை நிதியம் அறிக்கை

புதுடெல்லி:  உலகம் முழுவதும் உள்ள 57 வளரும் நாடுகளில் வசிக்கும் 50 சதவீதத்துக்கும் குறைவான பெண்களுக்கு, தங்கள் துணையிடம் பாலியல் உறவு வேண்டாம் என தவிர்ப்பதற்கான உரிமை இல்லை என ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின்  மக்கள் தொகை நிதியம், தங்களின் கூட்டாளருடன்  உடலுறவு வைத்துக் கொள்வதில் பெண்களுக்கு உள்ள உரிமைகள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், கூறப்பட்டு இருப்பதாவது:

வளர்ந்து வரும் 57 நாடுகளில் 55 சதவீத பெண்கள் தங்களது கணவருடன் உடலுறவு வைத்துக்கொள்வதற்கான விருப்பத்தை தெரிவிக்கும் உரிமையை பெற்றுள்ளனர். மேலும் கருத்தடை சாதனங்களை பயன்படுத்தலாமா, எப்போது பாலியல் உறவில் ஈடுபடலாம், குழந்தை பெற்றுக் கொள்வது  போன்ற சுகாதார பாதுகாப்பை தீர்மானிப்பதற்கான உரிமையை பெற்றுள்ளனர். மீதமுள்ள 45 சதவீத பெண்கள், தங்களது கணவரிடம் பாலியல் உறவு வைத்துக் கொள்ளலாமா? கருத்தடை சாதனங்களை பயன்படுத்தலாமா? என்பது பற்றி சொந்தமாக முடிவு எடுக்க முடியாது.

இது, அவர்களுக்கான அடிப்படை உரிமையை மீறும் செயலாகும். இது, ஏற்றத்தாழ்வுகளை வலுப்படுத்துகிறது. பாலின பாகுபாட்டில் இருந்து உருவாகும் இந்த முரண்பாடு, வன்முறைக்கு வழிவகுப்பதாக இருக்கிறது. ‘எனது உடல் எனது சொந்தம்’ என்ற பெண்களின் உரிமை, பிராந்தியத்துக்கு பிராந்தியம் வேறுபடுகிறது. கிழக்கு, தென்கிழக்கு ஆசியா, லத்தீன் அமெரிக்கா, கரீபியன் நாடுகளில் 76 சதவீத இளம்பெண்களும், பெண்களும் பாலியல் உறவு, கருத்தடை, சுகாதார பாதுகாப்பு குறித்த முடிவுகளை தாமாக எடுக்க முடியும்.

சஹாரன் ஆப்ரிக்கா, மத்திய மற்றும் தெற்கு ஆசிய பிராந்தியங்களில் இது போன்ற முடிவுகளை 50 சதவீதத்துக்கும் குறைவானவர்களே எடுக்க முடியும்.  மாலியில் 77 சதவீத பெண்கள் தனியாகவோ, துணையுடன் இணைந்தோ, கருத்தடை சாதனம் அல்லது மருந்தை பயன்படுத்துவது குறித்து முடிவு எடுக்க முடியும். அதே நேரத்தில் சுகாதார பாதுகாப்பு என வரும் போது 22 சதவீத பெண்களால் மட்டுமே சொந்தமாக முடிவு எடுக்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: