புதுடெல்லி: வன்முறை வழக்கில் டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், நடிகர் தீப் சித்து மீண்டும் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த ஜனவரி 26ம் தேதி அன்று நடத்திய டிராக்டர் பேரணியின் போது செங்கோட்டை மற்றும் டெல்லிக்குள் வன்முறை ஏற்பட்டது. இந்த வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்ட நடிகர் தீப் சித்துவுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும் தீப் சித்துவுக்கு ரூ. 30,000 பத்திரத்தில் ஜாமீன் வழங்கி, நீதிமன்றம் சில நிபந்தனையையும் வழங்கியுள்ளது.
அதில், தீப் சித்து காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், உங்கள் தொலைபேசியை 24 மணி நேரம் வைத்திருக்க வேண்டும். உங்கள் இருப்பிடம் பற்றிய தகவல்கள் விசாரணை அதிகாரிக்கு வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. முன்னதாக நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, தீப் சித்து தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என தெரிவித்தார். இந்நிலையில், செங்கோட்டையில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாக தீப் சித்துவை ெடல்லி போலீசார் நேற்று கைது செய்தனர்.
இந்திய தொல்லியல் துறை அளித்த புகாரின் அடிப்படையில் தீப் சித்து மற்றும் பலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. செங்கோட்டை வன்முறை தொடர்பான வழக்கில் தீப் சித்துவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், அவர் மற்றொரு வழக்கில் கைது செய்யப்படார். இதுகுறித்து தீப் சித்துவின் வழக்கறிஞர் அபிஷேக் குப்தா கூறுகையில், ‘அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. எனினும், பிற்பகல் 1.30 மணியளவில் (நேற்று) அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்பாக செங்கோட்டையில் நடந்த அதே சம்பவம் தொடர்பாக மற்றொரு வழக்கில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்’ என்றார்.