கொரோனா பரவல் எதிரொலியாக திருப்பதி கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: ஆந்திராவில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. தினமும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிகபட்சமாக சித்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது. ரூ300 தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டும் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சீனிவாசமங்காபுரம் ஸ்ரீகல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில் மற்றும் திருப்பதி கோதண்டராம சுவாமி கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கோயிலில் நடைபெறும் நித்ய கைங்கரியங்கள் அனைத்தும் பக்தர்கள் இல்லாமல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோதண்டராம சுவாமி கோயிலில் ஸ்ரீராமநவமியை முன்னிட்டு ஏப்.21ம் தேதி முதல் 23ம் தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் உற்சவங்கள் மட்டும் நடத்தப்படும் என்றும், 19ம் ேததி வருடாந்திர புஷ்பயாகம், 22ம் தேதி ஸ்ரீசீதாராம திருக்கல்யாணம், 23ம் தேதி ராமர் பட்டாபிஷேகம் ஆகியவற்றிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Related Stories: