சின்னமனூரில் கால்வாய் பாதை ஆக்கிரமிப்பு: வழியின்றி விழிபிதுங்கி நிற்கும் விவசாயிகள்

சின்னமனூர் : சின்னமனூர் காந்தி சிலை அருகே நீர்வரத்து கால்வாய் பாதையை ஆக்கிரமித்து மணல் மூட்டைகளை குவித்தும், முட்புதர்களை போட்டு அடைத்தும் வைத்திருப்பதால் விவசாயிகள் வழியின்றி விழிபிதுங்கி நிற்கின்றனர். உத்தமபாளையத்தில் இருந்து சின்னமனூர் வேம்படிகளம் வழியாக சீலையம்பட்டி வரையில் 10 கிலோ மீட்டருக்கு மேல் முல்லைப் பெரியாற்றிலிருந்து பிரியும் நீர்வரத்து கால்வாய் வந்து சேருகிறது . இதில் வருகின்ற பாசனநீரைக் கொண்டு சின்னமனூர் பகுதியில் 4 ஆயிரம் ஏக்கர் வயல்வெளிகளில் இருபோகம் நெல் சாகுபடி நடக்கிறது. இந்த வாய்க்கால் பாதையில், விவசாயிகள் உர மருந்துகள் ஏற்றிச் செல்வதும், அறுவடை நேரங்களில் பயிர்களை கொண்டு வருவதும் வழக்கம். இந்நிலையில் சின்னமனூர் காந்தி சிலை அருகே பெருமாள் கோயில் சாலையில் வெற்றிலை பேட்டை பகுதியில் உள்ள இந்நீர்வரத்து கால்வாய் பாதையை மணல் மூட்டைகள் மற்றும் முட்புதர்களை வைத்து ஆக்கிரமித்து அடைத்துள்ளனர்.

இதனால் தொழிலாளிகள் தோட்ட வேலைக்கு செல்லும் போக முடியாமல் தவிக்கின்றனர். விவசாயிகள் பலர் விவசாயத்தை தொடர்ந்து கவனிக்க முடியாமல் பாதிப்படைந்து உள்ளனர். இந்த ஆக்கிரமிப்பு குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் காலம் கடத்தி வருகின்றனர். இந்த கால்வாய் முழுவதும் குப்பை கழிவுகள், இறைச்சி மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் என தேங்கி கிடக்கின்றன. விஷ ஜந்துகளின் புகழிடமாகவும், பொறுக்க முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுவதாலும் இப்பகுதி மக்கள் முகம் சுளித்தப்படி செல்கின்றனர். எனவே கால்வாயை முறையாக தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்தள்ளனர். அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘‘விவசாயத்திற்கு அவசியமான நீர்வரத்து கால்வாய் பாதை ஆக்கிரமிப்பை உடனே அகற்ற ேவண்டும். அதுபோல் இங்குள்ள தாழ்வான பாலத்தை இடித்து அகற்ற வேண்டும். மழைநீரும், பாசனநீரும் தங்கு தடையின்றி செல்லவும், பாலத்தின் மேல்பகுதிக்கு தண்ணீர் வராத அளவிற்கு உயரமான பாலம் அமைக்கப்பட வேண்டும்.’’ என்றனர்.

Related Stories: