திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே உள்ள கொயிலாண்டி என்ற இடத்தை சேர்ந்தவர் ஜெஸ்னா சலீம். 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. 5 வருடங்களுக்கு முன் இவர் 2வது முறையாக கர்ப்பிணியாகி இருந்தார். அப்போது, வீட்டில் வைத்து வழுக்கி விழுந்ததில் காலில் காயம் ஏற்பட்டது. இதனால், வீட்டில் இவர் முழு ஓய்வில் இருந்தார். அப்போது இவரது வீடு கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இதனால் ஒரு அறையில் பழைய பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. தற்செயலாக அந்த அறைக்கு சென்றபோது ஒரு பழைய காகிதம் சுருட்டி வீசப்பட்ட நிலையில் கிடந்தது. அதை எடுத்துப் பார்த்தபோது அதில் கிருஷ்ணனின் ஒரு ஓவியம் இருந்தது. அதை பார்த்ததும் ஜெஸ்னாவுக்கும் கிருஷ்ணனின் படத்தை ஓவியமாக வரைய வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. பிறகு தான் ஜெஸ்னா கிருஷ்ணனின் ஓவியத்தை கண்ணாடியில் வரையத் தொடங்கினார். முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த இவர், கிருஷ்ணனின் ஓவியங்கள் வரைவதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால், அதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை.