கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கம் அதிகரிப்பு எதிரொலி: பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவோர் எண்ணிக்கை குறைந்தது

சென்னை: கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கம் அதிகரிப்பு எதிரொலியாக சென்னைக்கு பிற மாவட்டங்களில் இருந்து வருவோர் எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது. சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் அங்கேயே முடங்கி உள்ளனர். மக்கள் வெளியே வர பயப்படுவதால் சென்னையில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினம்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சராசரியாக 8 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இறப்போரின் எண்ணிக்கை தினசரி 30ஐ கடந்து வருகிறது. குறிப்பாக கொரோனாவின் பாதிப்பு தலைநகரான ெசன்னையில் தினமும் 3 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இறப்பு விகிதமும் சென்னையில்தான் அதிகமாக உள்ளது. சென்னையின் பக்கத்து மாவட்டமான செங்கல்பட்டில் பாதிப்பு 800ஐ நெருங்கி வருகிறது.

திருவள்ளூர் 453, காஞ்சிபுரம் 303 என்று பாதிப்பு இருந்து வருகிறது. அதேபோல, கோவை 583, மற்ற மாவட்டங்களில் பாதிப்பு தினசரி 100, 150, 200, 250 என்ற விகிதத்தில் உள்ளது. ஒவ்வொரு நாளும் பாதிப்பு என்பது அதிகரித்து வருவது மக்களிடையே ஒருவித பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால், மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி வருகின்றனர். கண்ணுக்கு தெரியும் நோய் என்றால் எப்படியாவது குணப்படுத்தி விடலாம். ஆனால், கொரோனா எந்த வடிவத்தில், எப்படி வருகிறது, யாருக்கு எல்லாம் நோய் இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியாத நிலைதான் இன்னமும் இருந்து வருகிறது. நல்லா இருப்பவரிடம் சகஜமாக பேசினால் அவர் பரிசோதனை செய்து கொண்டால் அவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது பழகியவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதனால், யாரிடம் பழகுவது என்று கூட தெரியாமல் மக்கள் இருந்து வருகின்றனர். கொரோனா 2வது அலை தாக்கம் அதிகரிப்பால் மக்கள் திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளுக்கும், கோயில் கொடை விழா, பண்டிகைகளுக்கு குடும்பத்துடன் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

கோடைகாலத்தில் சுற்றுலா தலங்களுக்கு மக்கள் செல்வது வழக்கம். இந்த முறை கொரோனால் அதுவும் தடைபட்டு போய் உள்ளது. அங்கு சென்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்வது என்று மக்கள் யோசிக்க தொடங்கியுள்ளனர். அதிக பணம் செலவழித்து சுற்றுலாவுக்கு சென்று ஏன் கொரோனா வைரஸை வாங்கி வர வேண்டும் என்று மக்கள் நினைக்க தொடங்கியுள்ளனர்.சென்னையை பொறுத்தவரை பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் ஒருவித அச்சத்திலேயே வேலைக்கு சென்று வருகின்றனர். தேவையில்லாமல் வெளியில் செல்வதை குறைக்க தொடங்கியிருக்கிறார்கள். அதுவும் செல்லும் இடங்களுக்கு கட்டாயம் மாஸ்க் அணிவதை வழக்கமாக கடைபிடிக்க தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக சாலையில் மக்கள் நடமாட்டம் என்பது வெகுவாக குறைய தொடங்கியுள்ளது. வாகன போக்குவரத்தும் குறைந்துள்ளது.

சென்னை என்பது வாகன போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நகரம் என்ற நிலைமை தற்போது மாறியுள்ளது. கொரோனாவால் நிலைமை தலைகீழாக மாறி போய் உள்ளது. அதே நேரத்தில் ஒரு சிலர் கொரோனா பற்றி எந்தவித அச்சமும் இல்லாமல் சுற்றுவதையும் காண முடிகிறது. அவர்களை மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. அரசு பஸ்களில் குறைவான பயணிகளுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுவும் இருக்கைகளில் அமரும் வகையில் தான் பயணிகளை ஏற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த அறிவுரை மாநகர பேருந்தில் கொஞ்சம் கூட கடைபிடிக்கப்படுவதில்ைல. வழக்கமான நேரத்தில் இருப்பது போன்று மக்கள் முண்டியடித்து கொண்டும், நெரிசலில் சிக்கியும் பஸ்களில் செல்வதை காணமுடிகிறது.

அலுவலகத்துக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டும் என்பதால், மக்கள் வேறு வழியின்றி பஸ்சில் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் ஏறும் நிலைதான் உள்ளது. எனவே, கூட்டம் நெரிசல் நிறைந்த நேரத்தில் அதிக அளவு பஸ்களை இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை தொடர்ந்து வலுக்க தொடங்கியுள்ளது. அதிகப்படியான  பஸ்களை இயக்காத வகையில் கொரோனாவின் பாதிப்பு எந்த விதத்திலும் குறைய வாய்ப்பில்லை என்று சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பு பயத்தால் சென்னைக்கு மற்ற மாவட்டங்களில் இருந்து வருவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு நிகழ்ச்சிகளுக்கு சென்றவர்கள் கூட சென்னைக்கு மீண்டும் வர வேண்டுமா என்று யோசிக்க தொடங்கியுள்ளனர். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை வரை சொந்த ஊரில் இருக்கலாம் என்று பலர் நினைத்து அங்கேயே தங்க தொடங்கியுள்ளனர்.  அதனால்தான் சென்னைக்கு பிற மாவட்டங்களில் இருந்து பஸ், ரயில்களில் வரும் கூட்டம் வழகத்தை விட குறைவாக காணப்படுவதாக கூறப்படுகிறது. தென்மாவட்ட ரயில்களில் எப்போது பார்த்தாலும் டிக்கெட் இல்லாத நிலை இருந்து வருவது வழக்கம். ஆனால், இப்போது தென் மாவட்டங்களில் இருந்து சென்னை மற்றும் சென்னையின் பக்கத்து மாவட்டத்துக்கு வரும் ரயில்களில் டிக்கெட் அனைத்தும் காலியாக இருந்து வருகிறது. இனி வரும் நாட்களில் இன்னும் பயணிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அரசு விதிமுறைகளை பின்பற்றினாலே கொரோனாவை விரட்டி விடலாம் என்றும் ஒவ்வொரு விதிகளிலும் ஒலிபெருக்கி மூலம் அரசு எச்சரிக்க தொடங்கியுள்ளது.

Related Stories: