பாவூர்சத்திரம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை

பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவர் எதற்காக  கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே மேலப்பாவூர் ஒற்றைப்பனையடியான் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முகேஷ் என்ற ராக்கி (27). கூலித்தொழிலாளியான இவர் தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் இரவு குறும்பலாப்பேரியில் இருந்து மேலப்பாவூர் செல்லும் சாலையில் கருப்பசாமி கோயில் அருகே, மேலப்பாவூர் குளத்திற்கு தென்பகுதியில் அரிவாளால் பல இடங்களில் சரமாரியாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தென்காசி மாவட்ட எஸ்பி சுகுணாசிங், ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னிவளவன், இன்ஸ்பெக்டர் ராஜ

குமாரி, சப்-இன்ஸ்பெக்டர் மாரிச்செல்வி மற்றும் போலீசார் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து அருகிலுள்ள பகுதிகளுக்கு சென்றது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்களும் அந்த பகுதியில் தடயங்களை சேகரித்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கூலித்தகராறில் முகேஷ் கொலை செய்யபட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: