சேலம்: சேலம் மாநகர், புறநகர் மாவட்ட பகுதி, பேரூர், ஒன்றிய செயலாளர்கள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தற்போதைய எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்திற்கு முதல்வரும், புறநகர் மாவட்ட செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு செய்திருந்தார். இதன்படி நேற்று மாலை, ஓமலூர் கட்சி அலுவலகத்தில் இந்த கூட்டம் நடந்தது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: ஓட்டு எண்ணிக்கை வருகிற 2ம்தேதி நடக்கிறது. ஏஜென்டுகள் ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை, அங்கிருந்து வெளியே வரக்கூடாது. கடைசி வரை உள்ளே இருக்க வேண்டும். நான் சேவல் சின்னத்தில் போட்டியிட்டபோது, கடைசி 2 பெட்டியில் தான் அதிக வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றேன். எனவே, கடைசி வரை அறையில் இருந்து வெளியே வரக்கூடாது. வேட்பாளரின் உறவினர் ஒருவரை ஏஜென்டாக நியமியுங்கள். அவர்கள் தான் கடைசி வரை வெளியே வரமாட்டார்கள்.