டெல்லி, பஞ்சாப்-அரியானாவின் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு கொரோனா

புதுடெல்லி: டெல்லி மற்றும் பஞ்சாப்-அரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 15ம் தேதி முதல் நேரடி விசாரணை தொடங்கப்பட்டது. ஆனால், மீண்டும் கொரோனா பரவலைத் தொடர்ந்து கடந்த 9ம் தேதி முதல் 23ம் தேதி வரை வீடியோ கான்பரன்சிங் முறையில் விசாரணை நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, கடந்த வாரம் 3 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மற்ற சில நீதிபதிகளுக்கு அறிகுறிகள் தென்பட்டதால் அவர்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டனர்.

இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என்.படேலுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் வீட்டு தனிமையில் உள்ளார். எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் அவர் நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே போல, பஞ்சாப்-அரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரவி சங்கர் ஜாவுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, நாளை முதல் வழக்குகள் அனைத்தும் வீடியோ கான்பரன்சிங்கில் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த வாரம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் அவரவர் வீடுகளில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்குகளை விசாரிப்பார்கள் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: