தமிழகத்தில் 1,800 குழந்தைகள் ஹீமோபிலியா நோயால் பாதிப்பு: எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவர் தகவல்

சென்னை: காயத்தால் ஏற்படும் ரத்தக்கசிவு, ரத்தத்தில் உள்ள உறையும் தன்மையால், மனிதர்களுக்குச் சிறிது நேரத்தில் ரத்தம் வடிவது நின்றுவிடும். இந்த ரத்தம் உறைவதற்கு என நமது உடலில் 13 வகையான ரத்த உறைபொருட்கள் உள்ளன. ஆனால் ரத்த உறை பொருளின் குறைபாட்டால் ரத்தக் கசிவு சிலருக்கு எளிதில் நிற்பதில்லை. இதுவே ‘‘ஹீமோபிலியா’’ எனப்படுகிறது. உலக ‘‘ஹீமோபிலியா’’ தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 17ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஹீமோபிலியா தினம் நேற்று அனுசரிப்பட்டது. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குனர் டாக்டர் எழிலரசி, மக்கள் தொடர்பு அதிகாரி கங்காதரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் குழந்தைகள் நலப்பிரிவு ஹீமாட்டாலஜி துறை பேராசியர் டாக்டர் ரவிசந்திரன் கூறியதாவது: உலகளவில் ஹீமோபிலியா நோய் 10 ஆயிரத்தில் ஒருவருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக தமிழகத்தில், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, தேனி, தர்மபுரி, மதுரை, சேலம் என 5 அரசு மருத்துவமனைகளில் பிரத்யேக சிகிச்சை மையங்கள் உள்ளன. இது பரம்பரை நோய் ஆண்களை மட்டும் தாக்கும் நோய். தமிழகத்தில் இதுவரை 1,800 ஆண் குழந்தைகள் ஹீமோபிலியா நோயினால், பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வரை இங்கு 160 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றன. பெரும்பாலும் இந்த நோய்கள் மூட்டு பகுதியை அதிகம் பாதிக்கிறது. எனவே குழந்தைகளுக்கு உடலில் ரத்தம் நிற்காமல் வடிந்தால் பெற்றோர் கட்டாயம் மருத்துவமனையில் பரிசோதனை செய்ய வேண்டும், என்றார்.

Related Stories: