சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பாக, இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்புத்துறை காவலர் என மொத்தம் 10,906 காலிப் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு வரும் 21-4-2021 முதல் ஒரு வார காலத்திற்கு தமிழகம் முழுவதும் நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது. கொரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமடைந்துள்ள நிலையில் இத்தேர்வினை நடத்துவது என்பது கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கவே அதிக வாய்ப்பினை உருவாக்கும். திருவிழாக்கள், திருமணங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், இத்தேர்வினை ஒத்திவைப்பதே சரியான முடிவாக இருக்கும்.